Skip to main content

பட்டப் பகலில் நடுரோட்டில் ரவுடி படுகொலை; பழைய பகையை தீர்த்த கும்பல்

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

thiruvaruthiruvarur needamangalam  poovanur rajkumar incident r needamangalam  poovanur rajkumar incident 

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்துள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். பூவனூர் ராஜ்குமார் மீது தமிழகம் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வனை கொலை செய்த வழக்கில் ராஜ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.  அந்த வழக்கில் சிறையில் இருந்து விட்டு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தனது ஆதரவாளர்கள் நான்கு பேருடன் வந்துள்ளார்.

 

வழக்கு விசாரணை முடிந்து, தனது வழக்கறிஞரை கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஸ்கார்பியோ கார் அதிவேகமாக வந்து ராஜ்குமாரின் காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி, டோர் லாக் ஆனதும் மற்றவர்கள் இறங்க முடியாமல் போக, ராஜ்குமார் மட்டும் தப்பிக்க ஓடும் போது, ஸ்கார்பியோ காரிலிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரின் தலை கால்  உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியினைத் தீவிரப்படுத்தினார்.

 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த நடேச தமிழார்வனின் மகன் ஸ்டாலின் பாரதி, வீரபாண்டியன், சூர்யா, அரசு, மாதவன் ஆகிய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஆய்வாளர்கள் ஜெகதீஸ்வரன் ராஜேஷ் இளங்கோ ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். விசாரணையில் இருக்கும் போலீசாரோ, "கடந்த 11.10.2021 அன்று நீடாமங்கலம் கடை தெருவில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நீடாமங்கலம் சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வனின் படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த படுகொலை நடந்துள்ளதாகத் தெரிய வருகிறது." என்கிறார்கள். இதற்கிடையில் ராஜ்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும் அவரது கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.