Skip to main content

நீர் சேமிப்பில் சிறந்த மாவட்டமாக திருவண்ணாமலையை தேர்வு செய்த ஸ்கோச் அமைப்பு...

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு, நீர் மேம்பாடு, பொதுமக்களிடம் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது ஆகியவற்றில் இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் சிறந்த மற்றும் முதல் மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் செயல்பட்டுள்ளதற்கு தேசிய அளவில் “ஸ்கோச் விருது - நீர்” என்கிற விருது திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.

 

thiruvannamalai got award for water management

 

 

இதுப்பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "இவ்விருது கடந்த 11.01.2020 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெற்றுக் கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜல் சக்தி அபியான் (நீர் மேலாண்மை இயக்கும்) மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நமது மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டு 11.2 மீட்டராக இருந்தது, தற்போது 3.4 மீட்டராக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள், சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணைகள், நீர் உறிஞ்சி குழிகள், நீர் குட்டைகள், நீர்வரத்து கால்வாய்கள், பண்ணை குட்டைகள், அகழிகள், தனிநபர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், புனரமைப்பு பணிகள், ஏரிகளில் மரம் நடும் பணிகள் என மொத்தம் ரூ.87.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை - நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 1555 பணிகள் ரூ.44.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் ‘நீர் வங்கி’ ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துடன் ஏரிகள், குளங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 260 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர் வங்கியில் பதிவு செய்து அதன் மூலம் 672 நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக மேற்கண்ட விருதுக்கு விண்ணப்பம் செய்து, பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கண்காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இறுதி சுற்றுக்கு சென்று அதில் பிற மாவட்ட பணிகளோடு நம் மாவட்ட பணிகள் ஒப்பீடு செய்யப்பட்டு அதன்பின்பே முதல் மாவட்டமாக தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது. இது நமது மாவட்டத்திற்கு பெருமை குரிய விஷயமாகும்.

இந்த விருதின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தின் பொதுமக்கள், விவசாயிகளுக்கு பெரிய ஊக்கம் தரும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாத்தின் மூலமாக தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு துளி நீரூம் பாதுகாக்கப்படும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்