Skip to main content

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்... அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
Thirumanur - Kamarasavalli arasan lake -


அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காமரசவல்லி ஊராட்சி எல்லையில் 130 ஏக்கர் பரப்பளவில் அரசன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 ஏக்கருக்கும் மேலாக ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது.

 

இந்நிலையில் அரசன் ஏரி பாதுகாப்பு குழுவினர் ஏரியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் எனவும் கரைகளை அமைத்து நிரந்தரமாக ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் மழைக்காலத்திற்கு முன்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் மாட்டுடன் ஏரிக்குள் இறங்கி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் போராட்டம் நடத்தவிருந்தனர்.

 

144 தடை உத்தரவு அமலில் உள்ளது எனவும் போராட்டக்குழுவினருடன் தங்களது கோரிக்கைகளை சொல்லுங்கள் மனுவாக கொடுங்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி அறிவொளி கேட்டுக் கொண்டார். 

 

அதனடிப்படையில் அரசன் ஏரி பாதுகாப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையிலும் காமரசவல்லி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி ஜெகதீசன் மற்றும் கிராம நாட்டாண்மைகள் முன்னிலையிலும் நடைபெற்றது. 


ஆலோசனைக் குழு கூட்டத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசன் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் எனவும் அரசன் ஏரியில் ஆக்கிரமிப்புகளை தொடராத வண்ணம் மழைக்காலத்திற்கு முன்பே கரையை அமைத்து தர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தீர்மான நகல்களை மனுவாக தூத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி கிராம நிர்வாக அலுவலர் புண்ணியமூர்த்தி காமரசவல்லி பஞ்சாயத்து தலைவர் இந்திராணி ஜெகதீசன் பாசன ஆய்வாளர் மணிமாறன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்