Skip to main content

“அறிவித்த கூலியை தராமல் குறைத்து தருகிறார்கள்”- மறியலில் ஈடுபட்ட தேசிய ஊரக வேலையாட்கள்!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

They are reducing the announced wages without paying
                                                                   மாதிரி படம்

 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மழவராயன் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் சுந்தரிபாளையம். இந்த கிராமத்தில் நடைபெற்ற தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் கூலி குறைவாக வழங்குவதாகக் கூறி பொதுமக்கள் நேற்று விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் இரு மார்க்கத்திலும் செல்லவேண்டிய வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வளவனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

அப்போது பொதுமக்கள் சார்பில், “எங்கள் ஊராட்சியில் நடைபெறும் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை ஊராட்சி செயலாளர் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறார். வேலைக்கு வராத நபர்களுக்கும் வந்ததாகக் கணக்குக் காட்டி அவர்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு அதைப் பங்கு பிரித்துக் கொள்கிறார்கள். அதேபோல் வேலைக்கு வருபவர்களுக்கு அரசு அறிவித்துள்ள கூலியைத் தராமல் தங்கள் இஷ்டப்படி குறைத்துக் கொடுக்கிறார். இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எங்களை மிரட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அரசு நிர்ணயித்த கூலியை எங்களுக்கு வழங்க வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

 

இதனைக்கேட்ட போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுப்பதாகவும் தற்போது மறியலைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே சட்டத்தை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சுந்தரி பாளையத்தைச்  சேர்ந்த கண்ணன், கார்த்திக்ராஜா, அருட்செல்வம், ராஜசேகர், முருகன், மணிபாலன், லட்சுமணன், ராஜா, உட்பட 90 பேர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.