தேனி மாவட்டத்தில் வடமாநில கொள்ளையர்களால் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் அம்மாபட்டி என்எஸ்எஸ் சாலையில் இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் சுற்றி திரிந்த வடமாநில கொள்ளையர்கள் மின்வாரிய துறையில் பணியாற்றும் ராஜா என்பவரது வீட்டின் சுவர் மீது ஏறி உள்ளே குதித்து கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து அருகில் இருந்த விஜயா என்பவரது வீட்டையும் உடைக்க முயற்சித்த போது விஜயா சத்தம் போட்டார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து அடுத்த தெருவுக்கு சென்ற கொள்ளையர்கள் ராமையா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயற்சி செய்துள்ளனர். அதை கண்டு ஆட்கள் சத்தம் போட்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவங்கள் எல்லாம் ராஜா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

வடமாநிலத்தை சேர்ந்த திருடர்கள் நான்கு பேர் அரைநிர்வாண கோலத்தில் வீட்டை நோட்டம் விட, அதில் இருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்கின்றனர். இப்படி நள்ளிரவில் தொடரும் வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசத்தால் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் தான் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி ஜெகநாதபுரத்தில் வசித்து வரும் கோபாலகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். கோபாலகிருஷ்ணன் குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்று விட்டு நேற்று காலையில் வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த 280 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் உடனே போலீசில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக நள்ளிரவில் எவ்வித அச்சமும் இன்றி சுற்றித்திரியும் வடமாநில கொள்ளையர்களால் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்து இருக்க்கூடும் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால் மாவட்ட அளவில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் உள்ள போலீசார் மெயின் ரோட்டில் மட்டுமே ரோந்து பணியில் கவனம் செலுத்துகிறார்களே தவிர, அந்தந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் பக்கம் ரோந்து பணி செல்ல போலீசார் ஆர்வம் காட்டுவது இல்லை. அதனால் தான் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.