Skip to main content

நீட் தேர்வில் இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பிடித்த ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகன்!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020

 

 

theni district periyakulam neet exam jeevith kumar

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி- மகேஸ்வரி தம்பதியரின் மூத்த மகனாக பிறந்தவர் ஜீவித்குமார். இவருக்கு ஷர்மிளாதேவி என்ற சகோதரியும், தீபன் என்ற சகோதரனும் உள்ளனர்.

 

பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஜீவித்குமார் 12- ஆம் வகுப்பு பயின்று நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றார். இவர் கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதி உள்ளார். நீட் தேர்வு முடிவில் 198 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.

 

இருப்பினும் இரண்டாவது முறையாக நீட் தேர்வை மாணவர் ஜீவித்குமார் எழுதி வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய ஆசிரியர் சபரிமாலா உள்ளிட்டோர் நாமக்கலில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவரை சேர்த்தனர். அங்கு மாணவர் நன்கு பயின்றார். அதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வில் பங்கேற்று மாணவர் ஜீவித்குமார் தேர்வு எழுதினார்.

 

theni district periyakulam neet exam jeevith kumar

 

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (16/10/2020) மாலை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) இணையதளத்தில் வெளியானது. இதில் மாணவர் ஜீவித்குமார் 720- க்கு 664 மதிப்பெண்களைப் பெற்று இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதல் மாணவனாகவும், இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1823- வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

ஒரு சிறு கிராமத்தில் பிறந்து இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து, இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் முதல் மாணவனாக வந்த ஜீவித்குமாரை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள். பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றன.

 

theni district periyakulam neet exam jeevith kumar

 

மாணவரின் தந்தை நாராயணமூர்த்தி ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி, தாய் மகேஸ்வரி தையல் தொழில் செய்து வருகிறார். சகோதரி ஷர்மிளா தேவி பி.எஸ்.சி. கணிதம் பாடப் பிரிவில் பட்டப்படிப்பை படித்து வருகின்றார். அதேபோல், மாணவர் ஜீவித்குமாரின் சகோதரர் தீபன் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலேயே 10- ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இப்படி ஏழை குடும்பத்தில் பிறந்து நீட் தேர்வில் சாதித்த மாணவர் ஜீவித்குமார், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

 

 

சார்ந்த செய்திகள்