Skip to main content

மாணவரை காதலித்து திருமணம் செய்த ஆசிரியை! 

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

The teacher who fell in love with the student and married!

 

நாமக்கல் அருகே, கல்லூரி ஆசிரியை ஒருவர் தன்னிடம் படித்த மாணவரையே காதலித்து பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்த மீனா (28) என்பவர் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இதே கல்லூரியில் நாமக்கல்லைச் சேர்ந்த பிரவீன் (24) என்ற வாலிபர், இளங்கலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கிறார். விரிவுரையாளரும், பிரவீனும் காதலித்து வந்தனர். 

 

இந்த காதல் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் அழைத்த கல்லூரி நிர்வாகத்தினர், கல்லூரி வளாகத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியையே மாணவரை காதலித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும், இதுகுறித்து இருதரப்பு பெற்றோரிடமும் கூறி விடுவோம் என்றும் எச்சரித்தனர்.

 

இந்நிலையில், காதலர் தினத்திற்கு முதல் நாளான பிப். 13ம் தேதி, அவர்கள் இருவரும் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியாமல் சென்று, ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு அவர்கள் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்குச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

பாடம் சொல்லித் தரும் ஆசிரியரே மாணவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்