Skip to main content

’தமிழக அரசும் தமிழக ஆளுநரும் இந்த பிரச்சனையில் இனியும் தாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - திருமாவளவன்

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
t

 

உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் .  இது குறித்து அவரது அறிக்கை:

இராஜீவ்காந்தி கொலைவழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த 2015 டிசம்பர் மாதத்தில் தமிழக ஆளுநரிடம் கருணை மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதன் அடிப்படையில் அந்த மனு மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட  7 பேரையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இராஜீவ் கொலை குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்த போது அன்றைய தலைமை நீதிபதி சதாசிவம் 7 வினாக்களை முன்வைத்து அவற்றுக்கு அரசியல்சாசன அமர்வு விளக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படி அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2015 ஆம் ஆண்டு டிசம்பரில்  தீர்ப்பை வழங்கியது. அதில் மூன்று நீதிபதிகள் ஒருவிதமாகவும் இரண்டு பேர் வேறுவிதமாகவும் தீர்ப்பளித்தனர். 

சிபிஐ போன்ற மத்திய அரசின் அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் மாநில அரசு தன்னிச்சையாகத் தண்டனைக் குறைப்பு செய்யமுடியாது என்று பெரும்பான்மைத் தீர்ப்பு கூறியது. 

 

சிறுபான்மை தீர்ப்பை அளித்த நீதிபதி யு.யு.லலித் ‘தண்டனை குறைப்பு செய்து விடுவிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்று அத்தீர்ப்பில் கூறியிருந்தார். தற்போது, உச்சநீதிமன்றம் அதேவிதமான தீர்ப்பைத்தான்  வழங்கியுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் அரசியல்சட்ட உறுப்பு 161ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசே விடுதலை செய்ய முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். எமது நிலைப்பாட்டையே இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதிசெய்துள்ளது.

 

தமிழக அரசும் தமிழக ஆளுநரும் இந்த பிரச்சனையில் இனியும் தாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.