Skip to main content

பத்திரிகையாளர் போர்வையில் மோசடி பேர்வழிகள்!- உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

தமிழகத்தில் 'பத்திரிகையாளர்' என்ற போர்வையில் உலவும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
 

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களைத் தெரிவித்தது குறித்தும், வழக்கு விசாரணையின் போது, விசாரணை தொடர்பான  தகவல்களை உயர் அதிகாரிகளுக்குத் தர மறுத்தது குறித்தும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

tamilnadu government repoters id card chennai high court


இந்த வழக்கு நேற்று (10.01.2020) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் அடையாள அட்டை நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது. அப்போது, மனுதாரரின் அடையாள அட்டைகளுடன்  சிலைக் கடத்தல் வழக்கில் சம்பந்தபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும் காதர் பாஷாவுக்கும் என்ன தொடர்பு என்றும் காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்தது எனவும் கேள்வி எழுப்பினர்.

 


மேலும், பத்திரிகையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலரும் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மஞ்சள் பத்திரிகை நடத்துபவர்களும் தங்களைப் பத்திரிகையாளர் எனக் கூறிக்கொள்வது வருத்தத்துக்குரியது. பத்திரிகைகளைப் பதிவு செய்ய குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் பத்திரிகைத் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது. தற்போது பத்திரிகைகள், செய்தி என்ற பெயரில் கருத்துத் திணிப்பைச் செய்கின்றன. பத்திரிகை சங்கங்களைப் போலி நிருபர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதுபோன்ற போலி பத்திரிகையாளர்களால் நேர்மையாகப் பணியாற்றும் உண்மை பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால், அரசின் சலுகைகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

tamilnadu government repoters id card chennai high court


உண்மையான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளனவா? என காவல் துறையினர் விசாரிக்க வேண்டும். மேலும், தகவல் தொலைத் தொடர்புத்துறை செயலாளர், பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தைத் தாமாக இந்த வழக்கில் இணைத்து உத்தரவிட்டனர்.
 

வழக்கு தொடர்ந்த மனுதாரரிடம், காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி வந்தது என்பது குறித்தும், மனுதாரரின் பத்திரிகை அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய  மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தமிழகத்தில் எத்தனை பத்திரிகைகள் உள்ளன? அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது? எத்தனை பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


 

சார்ந்த செய்திகள்