
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையம் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் டெல்லி பயணம் மேற்கொண்டனர்.
டெல்லியில் நாளை (19/07/2021) காலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படம் தலைமைச் செயலகத்தில் உள்ள அரங்கில் ஆகஸ்ட் 7- ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும், அந்த விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை செய்ய உள்ள தகவல் கூறுகின்றன.
அதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி முதலமைச்சர் சந்திக்கவுள்ளார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காகக் கடந்த மாதம் 17- ஆம் தேதி தமிழக முதலமைச்சர் டெல்லி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.