Skip to main content

“புகை மாசு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும்” - அமைச்சர் மெய்யநாதன் 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Tamil Nadu can be made a smoke free state says Minister Meiyanathan

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு, பரதம், நடனம், கலை, இலக்கியம், பாட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் இல்லாத தண்ணீர் பாட்டில்கள் எனப் பல துறைகளிலும் தமிழ்நாட்டின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது, இந்தப் பள்ளியின் மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்து நடக்க உள்ள மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்டோர் மற்றும் 17 வயதிற்குட்பட்டோர்களுக்கான கையுந்து பந்து, பீச் வாலிபால் போட்டிகளில் பங்கேற்கச் செல்கின்றனர்.

 

இந்த வீராங்கனைகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் தேவை உள்ளதையறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பள்ளிக்கு நேரில் சென்று மாநிலப் போட்டிகளில் பங்கேற்க உள்ள 27 மாணவிகளுக்கு விளையாட்டு உடை மற்றும் உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் மாணவிகள் மத்தியில் பேசும்போது, “நமக்கு ஏட்டுக் கல்வி மட்டுமே போதும் என்பதை கடந்து இந்தப் பள்ளி மாணவிகள் தொடர்ந்து விளையாட்டு, கலை போட்டிகளிலும் தனித்திறன்களை வெளிப்படுத்தி சாதித்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக எந்த ஒரு இடத்திலும் இங்கே பிளாஸ்டிக்கை காண முடியவில்லை. தண்ணீர் பாட்டில்கள் கூட பிளாஸ்டிக்கில் இல்லை என்பது சிறப்பாக உள்ளது. மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு கடந்த காலங்களைவிட பல மடங்கு புகை மாசு இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டுள்ளது. இதேபோல தொடரும் பட்சத்தில் புகைமாசு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும். அதுவும் மாணவர்களான உங்களால்தான் சாத்தியமாகும். 

 

நீங்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்கும்போது நீங்கள் உங்கள் வீட்டிலும் பிளாஸ்டிக்கை தவிர்க்க செய்வீர்கள். உங்கள் வீடுகளில் பிளாஸ்டிக் தவிர்க்கப்படும்போது உங்கள் அருகாமையில் உள்ள வீடுகளிலும் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவீர்கள். அதனால்தான் மாணவர்களில் இருந்து பிளாஸ்டிக் தவிர்ப்பு, புகைமாசு ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை தொடங்குகிறோம். அதன் ஒரு பகுதிதான் தீபாவளியில் புகை மாசு குறைந்தது என்ற பலன். வரும் காலங்களில் சுற்றுச்சுழலை பாதுகாக்க மாணவர்களாகிய நீங்கள் சபதம் ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே எதிர்கால சந்ததி நலமுடன் வாழ முடியும். விளையாட்டோடு சேர்ந்த படிப்பு தான் உயர் கல்வியையும் உடல் ஆரோக்கியத்துடன் வேலைவாய்ப்புகளையும் பெற்றுத் தரும். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. படிப்போடு விளையாட்டும் சேரும்போது அதற்கான சிறிய மதிப்பெண்கள் கூட இட ஒதுக்கீட்டில் கல்வியையும் வேலையையும் பெற்றுத் தருகிறது. 

 

விளையாட்டில் சாதிக்கும் வீராங்கனையாக வருகிறீர்கள். அதேபோல உங்கள் கவனம் விளையாட்டின் பக்கம் திசைமாறும்போது தீய எண்ணங்களின் பக்கம் உங்கள் சிந்தனை போகாது. அதனால் தீய பழக்கவழக்கங்கள் மறைந்து போகும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன் குற்றச் செயல்களும் குறைந்துவிடும். ஆகவேதான் விளையாட்டுடனான படிப்பு தேவை என்கிறோம். உங்களுக்கான தேவைகளை அறிந்து இந்த அரசு உங்களை ஊக்கப்படுத்தவும் உதவிகள் செய்யவும் தயாராக உள்ளது” என்றார்.

 

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை வள்ளிநாயகி, பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கொடியரசன் நன்றி கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.