
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணபுரம் அருகே உள்ள சிறுபனையூர் - தக்கா கிராமத்தில் வசித்து வருபவர் சையத் பக்க்ஷி மனைவி காதர் பீ. இவருக்கு அதே கூவனூர் கிராம எல்லையில் இரண்டு ஏக்கர் 33 சென்ட் இடம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை அதே ஊரில் வசிக்கும் அவரது உறவினரான ரஹ்மத்துல்லா என்பவர் வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியோடு சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காதர் பீ இறந்து விட்டதாகக் கூறி விண்ணப்பித்து வி.ஏ.ஓ, வருவாய் ஆய்வாளர் அறிக்கையின் பேரில் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் அனுமதியோடு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறப்பு சான்றிதழ் வாங்கி தன்னுடைய இரண்டு ஏக்கர் 22 சென்ட் இடத்தினை பட்டா மாற்றம் செய்துகொண்டு அபகரித்துக் கொண்டதாகவும், இது வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியோடு நடைபெற்றதாக காதர் பீ மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்தப் பட்டா மாற்றம் நடைபெற்றதால் அதற்கு நீதி கேட்டும் தான் உயிருடன் இருக்கும்போதே எப்படி இறந்துவிட்டதாக இறப்புச் சான்று கொடுத்துள்ளீர்கள்? என சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காதர்பீயின் கழுத்தில் மாலையை அணிந்து கொண்டு இறந்து கிடப்பது போல் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.