Skip to main content

லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

Surveyor incident villupuram

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்கா அலுவலகம் புதிதாக உருவாக்கப்பட்டு சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த, தாலுக்காவிற்கு உட்பட்ட ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவர் தனது உறவினர் நிலத்திற்கு, பட்டா மாறுதல் செய்வதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். அதனடிப்படையில் நில அளவை செய்யும் சர்வேயர் ராகவேந்திரன் நிலத்தை அளவீடு செய்து, பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்த நிலத்திற்கு உரியவரை செல்ஃபோனில் தொடர்புகொண்டு, 7,500 ரூபாய் லஞ்சமாகப் பணம் தரவேண்டும், பணம் கொடுத்தால், உடனடியாக அதற்கான பணிகளில் ஈடுபட்டு விரைந்து செய்துகொடுப்பேன் என்று பேரம்பேசியுள்ளார்.

 

நில உரிமையாளருக்கு அவ்வளவு பணம் கொடுப்பதற்கு வசதி இல்லை. இதையடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரிடம், மூர்த்தி தனது உறவினருடன் சென்று புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரசாயனம் தடவிய 7,500 ரூபாய் நோட்டுகளை நில உரிமையாளர் மூலம் நில அளவையர் ராகவேந்திரனிடம் கொடுக்குமாறு பணத்தைக் கொடுத்து அனுப்பினர். அதன்படி, நிலத்தின் உரிமையாளர், அந்த  நில அளவையர் ராகவேந்திரனிடம் சென்று, லஞ்சப் பணம் 7,500 ரூபாய் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் யுவராஜ் தலைமையிலான 8 பேர் கொண்ட போலீசார், ராகவேந்திரன் லஞ்சப் பணத்தை வாங்கும்போது கையும் களவுமாகப் பிடித்து, கைது செய்தனர். அவரை, கண்டாச்சிபுரம் தாலுக்கா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்