Skip to main content

தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை- நீதிபதிகள் காட்டம்...

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 வயது) கனடா செல்வதற்காக நேற்று தேர்வு எழுதியுள்ளார்.  தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
 

subasri 2

 

 

அப்போது, சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த திருமணத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் வைத்தது மாநகராட்சி அதிகாரிகள். இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது. அதில் தமிழக அரசையும், அரசியல் கட்சிகளை குறித்தும் சரமாரி கேள்விளை எழுப்பினார்கள். இறுதியாக, 2.15 மணிக்கு காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் ஆஜராகினர். 

அவர்களிடம் பேனர் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுநர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு விதிமீறி பேனர் வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பெனரிலுள்ள நிறம்தான் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்ட செய்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும் தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை என நீதிபதிகள் விமர்சித்தனர். உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா? ஏதாவது நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் காவு கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இனி பேனர்கள் வைக்கமாட்டோம் என உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என நீதிபதிகள் எச்சரித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்