Skip to main content

தவறு செய்தது எந்த அரசாக இருந்தாலும் மாணவர்களுக்கு நீதி தேவை! ராமதாஸ்

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
neet_exam


நீட் தேர்வு விவகாரத்தில் தவறு யாருடையதாக இருந்தாலும் அதற்கு மாணவர்கள் பலிகடா ஆக்கப்படக்கூடாது. மாணவர்களுக்கு நீதி தேவை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

 மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கான வினாத்தாள்களை தமிழில் மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட தவறுக்கு சி.பி.எஸ்.இ பொறுப்பேற்க முடியாது; தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் தவறுக்கு காரணம் என்பதால் கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார். மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறை எதுவுமின்றி, மத்திய அமைச்சர் கூறியுள்ள இந்த பொறுப்பற்ற பதில் கண்டிக்கத்தக்கதாகும்.
 

 

 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய வினாவுக்கு இவ்வாறு பதிலளித்த அமைச்சர் ஜவடேகர்,‘‘ வினாத்தாளை மொழிபெயர்ப்பதில் ஏற்படும் தவறுகளுக்கு சி.பி.எஸ்.இ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. ஒருவேளை மொழிபெயர்க்கப்பட்ட வினாத்தாளில்  ஏதேனும் பிழை இருந்தால், ஆங்கில வினாத்தாளைப் பார்த்து தான் விடையளித்திருக்க வேண்டும்’’ என்று கூறினார். இது மத்திய அரசின் பொறுப்புகளை தட்டிக்கழிக்கும் செயலாகும். இதை ஏற்க முடியாது.
 

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மிகவும் முக்கியமானது. தமிழகத்திலிருந்து இத்தேர்வை எழுதிய  1,14,602 மாணவர்களில் சுமார் 24,000 பேர் தமிழ் மொழியில் தேர்வு எழுதினார்கள். அவர்களுக்கான வினாத்தாள்களை மொழிபெயர்ப்பதில் சி.பி.எஸ்.இ. மிகவும் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும். தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் தவறுதலாக மொழி பெயர்த்து விட்டனர்  என்று மத்திய அரசு அதன் பொறுப்பை தட்டிக்கழித்து விட்டு, இந்த விவகாரத்தை எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்த வினாத்தாள்களை சி.பி.எஸ்.இ சரிபார்த்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது சி.பி.எஸ்.இ தரப்பின் நியாயப்படுத்த முடியாத தவறாகும்.
 

 

 

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ, வினாத்தாள் மொழிபெயர்ப்புக்காக தமிழக அரசை சார்ந்திருந்ததே தவறு ஆகும். மத்திய அரசின் ஊடக மற்றும் ஊடகத் தொடர்பு நிறுவனங்கள் சென்னையில் ஏராளமாக உள்ளன. பிரதமர் உரைகள் மற்றும் மத்திய அரசின் செய்திக்குறிப்புகளை  அந்த நிறுவனங்கள் தான் மொழிபெயர்க்கின்றன. அவற்றின் மூலம் நீட் வினாத்தாளை பிழையின்றி மொழிபெயர்த்திருக்க முடியும். அவர்களையும் தாண்டி மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், சி.பி.எஸ்.இ-யின் தென் மண்டலத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் மிகத்திறமையாக மொழிபெயர்க்கக் கூடியவர்கள் தான். அவர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பதை விடுத்து, தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தவறு செய்ததால், அதற்கான தண்டனையை தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது இரக்கமற்ற கொடூர சிந்தனை.
 

இதே சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், ‘‘நீட் தேர்வில் 554 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 196 கருணை மதிப்பெண்களை வழங்கினால், அவரின் மொத்த மதிப்பெண் 750 ஆக உயரும். நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்ணே 720தான் என்ற நிலையில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு எப்படி கருணை மதிப்பெண்ணாக 196 தர முடியும்? இது குழப்பத்தை ஏற்படுத்தும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது. இது மதுரை உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட குழப்பமே தவிர, தீர்ப்பில் உள்ள குழப்பம் அல்ல. தவறாக கேட்கப்பட்ட 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க என்பது தான் தீர்ப்பு. தமிழில் தேர்வெழுதிய ஒரு மாணவர் 600 மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்றால், சரியான வினாக்கள் அனைத்துக்கும் துல்லியமாக பதிலளித்ததுடன், தவறாக கேட்கப்பட்டவற்றில் 19 வினாக்களை சரியாக புரிந்து கொண்டு விடையளித்திருக்கிறார் என்று பொருள். அந்த மாணவருக்கு மீதமுள்ள 30 தவறான வினாக்களுக்கு மட்டும் 120 கருணை மதிப்பெண்கள் வழங்கினால் போதுமானது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இதைக் காரணம் காட்டி மாணவர்களுக்கு நீதியை தடுக்கக்கூடாது.
 

 

 

நீட் தேர்வு வினாக்கள் தமிழில் தவறாக கேட்கப்பட்டதற்கு மத்திய அரசு காரணமா, மாநில அரசு காரணமா? என்பது விவாதப் பொருள் அல்ல. வினாக்கள் தவறாக கேட்கப்பட்டனவா... இல்லையா? என்பது தான் விடை காணப்பட வேண்டிய வினா. கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன என்பதை சி.பி.எஸ்.இ ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அந்த வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பது தான் சமூக நீதியும், இயற்கை நீதியுமாகும். தவறு யாருடையதாக இருந்தாலும் அதற்கு மாணவர்கள் பலிகடா ஆக்கப்படக்கூடாது. எனவே, தமிழக மாணவர்கள் பக்கம் உள்ள நியாயத்தையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மதித்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதாக உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்து இந்தச் சிக்கலை சி.பி.எஸ்.இ முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.