Skip to main content

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி?; போலீசார் தீவிர விசாரணை!

Published on 02/09/2024 | Edited on 02/09/2024
The student who ate the noodles was a tragic victim in trichy

திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடிமெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று (01-09-240 இரவு சிறுமி வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவர் கண் விழிக்காததால் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் விழிக்காததால் பதற்றம் அடைந்தனர். பின்னர் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த  ஜான் ஜுடிமெயில் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறுதி சடங்கு செய்வதற்குரிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி இறப்பில் சந்தேகம் உள்ளது என அரியமங்கலம் போலீசாருக்கு மர்ம நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற பொழுது, ஜான் ஜுடிமெயில் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் செய்வதறியாது விழித்த அரியமங்கலம் போலீசார் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சட்டரீதியாக பிரேதத்தை கைப்பற்ற முடிவு எடுத்தனர். பின்னர், அவர்களது உறவினர்களிடம் சுமுகமாக பேசி, ‘எங்களுக்கு புகார் வந்துள்ளது, அதன் அடிப்படையில் நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும். இன்று மாலை 5 மணிக்குள் மருத்துவமனையில் கொண்டு சென்றால்தான் சிறுமியின் உடலை உங்களுக்கு பிரேத பறிசோதனை செய்து கொடுக்க முடியும்’ எனக் கூறி அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இது குறித்து அவரது உறவினர்கள் நம்மிடம் தெரிவிக்கையில், ‘சிறுமிக்கு நூடுல்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டதால் அடிக்கடி நூடுல்ஸ் வாங்கி தானே சமைத்து சாப்பிடுவார். அந்த வகையில் தான் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் போட்டு வாங்கி நேற்று இரவு சமைத்து சாப்பிட்ட பிறகு குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தினார். அதன் பின்னர் அவர் படுக்கைக்கு சென்று விட்டார். விடிந்து பார்த்தபோதுதான் அவர் பிரேதமாக இருந்ததை அறிய முடிந்தது. பின்னர், எங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது தான் போலீசார் எங்களது பெண்ணின் உடலை பறித்து சென்றனர்’ என்றனர். இதுகுறித்து அப்பகுதியில் சிலர் தெரிவிக்கையில், ‘சிறுமியை நேற்று இரவு பார்க்கும்போது நல்ல நிலையில் திடகாத்திரமாக இருந்தார். காலையில் அவர் இறந்து விட்டார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறுமி குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதனால் இவர் உயிரிழந்திருக்கலாம்’ என அச்சம் எங்களுக்கு என தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்