
தேனியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாறுவேடப் போட்டி, பேச்சு, ஓவியப் போட்டி, நடனம் ஆகிய போட்டிகள் நடந்தன. மாறுவேடப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்கள் போன்றும் மரங்கள், விண்வெளி வீரர்கள் போன்றும் வேடம் அணிந்து வந்தனர்.
அந்த வரிசையில் தேனி மேலப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீகபி, சமீபத்தில் மறைந்த கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் வேடத்தில் வந்திருந்தார். அத்துடன் 'உங்கள் ஆன்மா எங்களோடு வாழ்கிறது' (your soul lives with us) என்ற வாசகத்துடன் கூடிய விஜயகுமார் உருவப் படத்தை எடுத்து வந்து எல்லோர் முன்னிலையிலும் மரியாதை செலுத்தினார். அது மாறுவேடப் போட்டி நடந்த மண்டபத்தை ஒரு நிமிடம் அமைதியில் ஆழ்த்தியது.
நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த டி.ஐ.ஜி. விஜயகுமார் மன அழுத்தப் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த மாதம் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. அவருடைய நேர்மைக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாறுவேடப் போட்டியில் அவருடைய வேடமிட்டு மிடுக்காய் மாணவி நடந்து வந்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.