
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 2018ஆம் ஆண்டு 100 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். அதில், 100வது நாள் போராட்டத்தின் போது, 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கு சம்பந்தமாக 101 பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்தக் குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நடுவன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 101 பேரில் ஏற்கனவே 26 பேர் ஆஜராகி சம்மன் பெற்றிருந்தனர். இந்நிலையில் இன்று, அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதன் காரணமாக மீதமுள்ள 74 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 71 பேர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.