Published on 24/11/2023 | Edited on 24/11/2023
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த நெய்தாலபுரம் கிராமம். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தின் உள்ளே குடிமகன்கள் நுழைந்து, அங்கு மது அருந்துவது தொடர்கதையாகி வருகிறது. மது பாக்கெட் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை பள்ளி வளாகத்தில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர்.
குறிப்பாக கர்நாடக மதுபாக்கெட் பள்ளி வளாகத்தில் உள்ளே குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அரசு பள்ளி வளாகத்தில் மது அருந்தும் குடிமகன்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.