Skip to main content

இரண்டு நாட்கள் அடைத்துவைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை... சென்னையில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அண்மையில் ஆவடியில் 4 வயது சிறுமி சொந்தக்காரர் போல பழகிய பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு குளியலறையில் உள்ள பக்கெட்டில் திணிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

sexual abuse


இந்த சம்பவத்திற்கு முன் அதேபோல் சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் அதே குடியிருப்பில் வேலை செய்யும் செக்யூரிட்டிகள், லிப்ட் ஆபரேட்டர்கள் என பதிமூன்று பேரால் பல நாட்களாக தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்படி நாளுக்குநாள் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகள் அரங்கேறிவரும் நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் பாட்டியுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்த 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரில் மூன்று பெண்களை  கைது செய்த காவல்துறை சிறுமியை வன்கொடுமை செய்த புகாரில் அந்த ஐந்து பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

sexual abuse


பள்ளிப்படிப்பை ஒன்பதாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு தாய், பாட்டி, சகோதரன், சகோதரி என குடும்பத்தாருடன் சென்னை புரசைவாக்கத்தில வசித்து வந்துள்ளார் அந்த சிறுமி. ஜூலை 3ஆம் தேதி வீட்டில் சிறுமியும் பாட்டியும் மட்டுமே இருந்த போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. பாட்டியுடன் கோபித்துக் கொண்ட அந்த 15 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். தாய் மற்றும் உடன் பிறந்தவர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் காணாமல்போன சிறுமியை தேடி அலைந்தவர்கள் இறுதியில் புளியந்தோப்பு சரகம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

police


காவல்துறையினரும் சிறுமியை தேடியும் சிறுமி மீட்கப்படவில்லை. இந்நிலையில் என்ன செய்வதென்று குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருந்த பொழுது ஜூலை 9ம் தேதி ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தார் அந்த சிறுமி. கோபத்தில் போனவர் மனம் மாறி வந்து விட்டார் என அவரது குடும்பம் மகிழ்ச்சி அடைந்தது. சிறுமி மீண்டும் கிடைத்துவிட்டதாக காவல்துறையிடம் தெரிவிக்க அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு குடும்பத்தினர் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு சென்றனர்.

காவல் நிலையத்தில் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டை விட்டு வெளியேறிய நேரத்திலிருந்து வீடு திரும்பும் வரை என்ன நடந்தது என அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பத்தினரிடம் இதுபற்றி எதுவும் வாய் திறக்காத சிறுமி போலீசாரின் விசாரணையில் உண்மைகள் அனைத்தையும் தெரிவித்தார். வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுமி ஏற்கனவே அறிமுகமான வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெபினா என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரும் அடைக்கலம் தருவதாக வீட்டில் சேர்த்துக் கொண்டுள்ளார். தன்னுடன் தங்கியிருந்த சிறுமியை முபீனா பேகம் என்பவருடன் சேர்ந்து நிஷா என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் ஜெபினா.

sexual Torture to 15-year-old girl in Chennai


புரசைவாக்கத்தை சேர்ந்த நிஷா பாலியல் தொழில் செய்பவர் எனக் கூறப்படுகின்ற நிலையில், நிஷா தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்தச் சிறுமி தெரிவித்தார். நிஷா வீட்டில் ஐந்து பேர் அடைத்து வைத்து தன்னை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையினரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இரண்டு நாட்கள் கொடுமைக்கு பின் நிஷா தன்னை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜெபினா,முபீனா பேகம், நிஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறுமியை வன்கொடுமை செய்த 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் மீண்டும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

police

நேற்றுதான் சிறார்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடிய சட்டதிருத்தங்கள் செய்யப்பட மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத்தண்டனை வரை நிறைவேற்றப்பட இந்த மசோதா வழிவகை செய்யும். குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது, அதை வைத்து வர்த்தக நோக்கில் செயல்படுவது என பாலியல் வன்கொடுமை மட்டுமின்றி இதுபோன்ற எந்த செயல்களில் ஈடுபட்டாலும் அதிகப்படியான தண்டனை விதிப்பதற்கும், அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்திருத்த மசோதா வழிவகை செய்யும். இப்படி சட்டங்களும், தண்டைனைகளும் கடுமையானால்தான் இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கமுடியும் என்பதே உண்மை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.