Skip to main content

அசத்திய பள்ளி மாணவர்கள்; வியப்பூட்டிய கைவினைக் கண்காட்சி

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நாட்டுப்புற கைவினைக் கலைப் பொருட்களின் கண்காட்சி நடந்தது.

 

எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் என்ற பாடத்தில் தங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கைவினைக் கலைப் பொருட்களைச் செய்து வரத் தமிழாசிரியர் வெ.கிருஷ்ணவேணி மாணவர்களுக்கு செயல்திட்டம் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் மாணவர்கள் களிமண், பனையோலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள், ஓலைக் கொட்டான்கள், உடுக்கை, பறவைக் கூடுகள், படகு போன்ற பொருட்களைச் செய்திருந்தனர்.

 

இப்பொருட்களின் கண்காட்சியைப் பள்ளித் தலைமையாசிரியர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். இதில் தாதனேந்தலைச் சேர்ந்த அசிகா என்ற மாணவி செய்த பனை ஓலையில் புட்டு அவிக்கும் பெட்டி, பொக்கனாரேந்தல் ரித்திகாஸ்ரீ, திருப்புல்லாணி ஆயிசத் சபா, தௌபிக் நிஷா ஆகியோர் பனை ஓலையில் செய்த ரோஜா, தாமரை பூக்கள், குருவிகள் உருவங்கள் அனைவரையும் கவர்ந்தது.

 

 

சார்ந்த செய்திகள்