Skip to main content

1991இல் ஜெயலலிதா சிறப்பு வழிபாடு நடத்திய கோவிலுக்கு சென்ற சசிகலா..! 

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

sasikala


சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சமீபத்தில் விடுதலையானார் சசிகலா. அதன்பின் அவர், தி.நகரில் உள்ள இல்லத்தில் தங்கி ஒய்வெடுத்துவந்தார். அவரது வருகை தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பெரும் மாறுதலை உண்டாக்கும் என பரவலாக பேசப்பட்டது. அதேபோல் அவரும், விடுதலையாகி சென்னை திரும்பியபோது வழியில், “விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” என தெரிவித்தார். ஆனால், சென்னை வந்த அவர் சில நாட்களாக அமைதி காத்துவந்தார். 

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்துவிட்டு, “விரைவில் தொண்டர்களை சந்திப்பேன்” என தெரிவித்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார். 

 

அதன்பின் சமீபத்தில் தஞ்சாவூர் சென்ற சசிகலா, அவரது குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின் அவரது கணவர் நடராஜனின் நினைவிடம் சென்று மரியாதை செய்தார். மேலும், தஞ்சாவூரில் உள்ள அவரது குலதெய்வ கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்டவற்றுக்கும் சென்றுவந்தார். இந்நிலையில், நேற்று (24.03.2021) வடசென்னையில் பிரசித்தி பெற்ற  திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலுக்கு சென்று வழிபட்டார். 

 

Sasikala visited the temple where Jayalalithaa did special worship in 1991

 

மறைந்த ஜெயலலிதா, கடந்த 1991ஆம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வருகை தந்து மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு வெள்ளி திருவாச்சி மற்றும் நிலை கதவுகளை வழங்கி வழிபட்டார். முதல்வரான பின்பு பலமுறை இக்கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் வடிவுடையம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டார். அதேநேரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சசிகலா குறித்த கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலையும், சசிகலா குறித்து பெருமைப்படுத்தும் விதமாகவும்  பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை ஐந்து வருடங்களுக்குப் பின்பு சசிகலா வடிவுடையம்மன் கோயிலுக்கு வருகை தந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுடன் திருக்கோயில் உதவி ஆணையர் சித்ராதேவி மற்றும் ஆலய பணியாளர்கள் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.