Skip to main content

ஏழைக் குழந்தைகளைப் புறக்கணித்த சசிகலா! அதிமுகவில் எதிர்ப்பு!   

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

Sasikala ignored poor children! Opposition in ADMK!

 

சசிகலாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவரது ஆதரவாளர்களால் கடந்த 18-ந் தேதி தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவரவர்களின் பொருளாதார சக்திக்கேற்ப சசிகலாவின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்கள். 

 

ஒவ்வொரு ஆண்டும் சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் இருக்கும் காதுகேளாத, வாய்ப்பேச இயலாத பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கி, அவர்களுக்குத் தேவையான நோட் புத்தகங்கள் கொடுத்து கொண்டாடுபவர் அதிமுகவின் தென்சென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் என்.வைத்தியநாதன். சசிகலாவின் தீவிர விசுவாசி. இந்தாண்டும் அறுசுவை வழங்கியும், நோட் புத்தகங்கள், விளையாட்டு கருவிகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கியும் கொண்டாடினார் என்.வைத்தியநாதன்.  

 

இதேபோல, சசிகலா விசுவாசிகள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை ஏழைக்குழந்தைகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் வழங்கினர். இந்த சம்பவம் அதிமுகவில் உற்று கவனிக்கப்பட்டது. இந்த நிலையில், சசிகலாவோ தனது பிறந்தநாளை பணக்காரர்கள் வந்து போகும் சென்னை வேளச்சேரியில் பிரம்மாண்டமாக இயங்கி வரும் ஃபீனிக்ஸ் மாலில் தனது குடும்பத்தினருடன் குதுகலமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். ஏழைக்குழந்தைகளுடன் உணவருந்தி அவர்களை மகிச்சிப்படுத்த தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அவரது விசுவாசிகள் பலரும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் அதில் கலந்து கொள்ள மறுத்துள்ளார் சசிகலா. 

 

Sasikala ignored poor children! Opposition in ADMK!

 

இந்த சம்பவம் அதிமுகவில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுகவினர், அரசியல் தலைவர்கள் தங்கள் பிறந்தநாளை ஆடம்பரமின்றி தங்கள் வீட்டிலேயே கேக் வெட்டி எளிமையாக கொண்டாடுவார்கள் அல்லது தங்களின் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்வர். இதையும் தாண்டி சிலர், ஏழைக் குழந்தைகளுக்கு நல உதவிகள் செய்து அந்தக் குழந்தைகளுடன் உணவருந்தி கொண்டாடுவார்கள். 


ஆனால், சசிகலாதான் முதல்முறையாக, ஏழைகள் எட்டிக்கூடப் பார்க்க முடியாத ஆடம்பர மாளிகையான ஃபீனிக்ஸ் மாலில் தனது குடும்ப உறவுகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். ஏழைக் குழந்தைகளை புறக்கணித்து விட்டார். அதேபோல, அதிமுகவில் சசிகலாவுக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதற்கு காரணமே, அவரது குடும்ப உறவுகளை விட்டுவிட்டு அரசியல் செய்யமாட்டார் என்பதுதான். 


எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக பெருந்தலைகள் எல்லோருமே, தன்னைச் சுற்றியுள்ள குடும்ப உறவுகளை விட்டுவிட்டு அவர் மட்டும் கட்சிக்குள் வந்தால் ஏற்றுக் கொள்கிறோம் என்றுதான் சொல்கிறார்களே தவிர, ஒட்டுமொத்தமாக அவரை புறக்கணிக்கவில்லை. அதாவது, சசிகலாவுக்கு நேரடி வாரிசுகள் கிடையாது. அவர் மட்டும் தான். ஆனால், அவரைச் சுற்றி அவரது சொந்தபந்தங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களைப் புறக்கணித்து விட்டு அவர் வரவேண்டும் என்றுதான் அதிமுக தலைவர்கள் விரும்புகிறார்கள். காரணம், கட்சிக்குள் கலகம் வெடிக்கவும் கட்சிக்கு கெட்டப்பெயரை உருவாக்குவதும் சசிகலாவின் சொந்தங்கள் தான்! அதனால் தான் அவர் மட்டும் அதிமுகவுக்கு வரட்டும் என நினைக்கிறார்கள் அதிமுக தலைவர்கள்.


ஆனால், குடும்பத்தினரை விட்டு விட்டு அவரால் வரமுடியாது. அதை நிரூபிப்பது போல, தனது பிறந்தநாளை குடும்ப உறவுகளுடன் கொண்டாடியிருக்கிறார் சசிகலா. ஏழைக் குழந்தைகளுடன் கொண்டாட மறுத்ததும், குடும்ப உறவுகளைப் புறக்கணிக்காததும்தான் சசிகலாவுக்கு எதிராக இருக்கிறது. சசிகலாவின் இயல்பான குணமும் அதுதான். அதனால்தான் அவருக்கு அதிமுக எதிர்ப்பு அதிகரிக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள். ஏழைக் குழந்தைகளை புறக்கணித்து ஆடம்பர மாளிகையில் சசிகலா பிறந்த நாளை கொண்டாடியது தான் அதிமுகவில் விமர்சிக்கப்படுகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.