Skip to main content

நூதன முறையில் பணம் கையாடல்; மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

sankarapuram atm money incident action taken by police

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரியங்கா (வயது 31). 2020 ஆம் ஆண்டு ஹிட்டாச்சி நிறுவனம் இவரை முகவராக வைத்து அந்தப் பகுதியில் ஒரு ஏடிஎம் மையத்தை நிறுவியது. மேலும், வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்து நிரப்பும் பொறுப்பு பிரியங்காவிற்கு வழங்கப்பட்டது. இதற்காக ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து சங்கராபுரத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்படும். இந்த பணத்தை எடுத்து ஏடிஎம் மிஷினில் நிரப்புவதற்கு ஒரு ரகசிய குறியீடு எண் பிரியங்காவுக்கு வங்கி சார்பில் அனுப்பப்படும். அந்த எண்ணை வங்கியில் காட்டி பணத்தை எடுத்து வந்து ஏடிஎம் மிஷினில் நிரப்பும் பணியை பிரியங்கா செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏடிஎம் மிஷின் கோளாறுகளை சரி செய்வதற்கு காலதாமதம் ஆனது. அந்த காலகட்டத்தில் மும்பையில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தை ரகசிய எண்ணைக் கொண்டு எடுத்த பிரியங்கா தனது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்திக் கொண்டுள்ளார். இந்த மோசடியைக் கண்டறிந்த ஹிட்டாச்சி நிறுவனத்தின் பேமெண்ட் சர்வீஸ் துணை தலைவரான ஜேம்ஸ் பிலிப் என்பவர், பிரியங்கா மீது சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியன் முத்து வழக்கு பதிவு செய்து பிரியங்காவிடம் விசாரணை நடத்தினார். அதில் பிரியங்கா ஹிட்டாச்சி நிறுவனத்தின் பணத்தை எடுத்து தனது வங்கிக் கணக்கில் செலுத்தி கொண்டது தெரியவந்தது. இதையடுத்து பிரியங்கா, அவருடன் பண மோசடிக்கு துணையாக இருந்த விஜயகுமார், சிவக்குமார், தன்ராஜ் ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவை கைது செய்துள்ளனர். ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும் பணி மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் கையாடல் செய்துள்ள சம்பவம் சங்கராபுரம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்