Skip to main content

தண்ணீரின்றி தவிக்கும் சம்பா நெல் பயிர்; கூடுதல் தண்ணீர் திறப்பை எதிர்பார்க்கும் விவசாயிகள்

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Samba rice crop suffering from lack of water; Farmers expect to open additional water


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் தண்ணீரின்றி  சம்பா நெல் பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காத்திட வீராணம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள பி.முட்லூர், அகரம், பெரியகுமட்டி, அரியகோஷ்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் சம்பா நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்டு பயிர் நன்றாக வளர்ந்துள்ளது.

இது வீராணம் ஏரி பாசனத்தின் கடைமடை பகுதியாகும். தற்போது பயிர் பால் பருவ கதிர் வரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதிக்கு பாசனத்துக்கு தண்ணீர் வரும் அரியகோஷ்டி வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலையில் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த சிறிய அளவிலான மழையால் பயிர் தப்பியுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து வீராணம் ஏரியில் இருந்து அரியகோஷ்டி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்த அளவு உள்ள நிலையில் கடந்த 21ம் தேதி அரியகோஷ்டி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் 22 கி மீ தூரம் கடந்து பரங்கிப்பேட்டை பகுதியான அரியகோஷ்டி, அகரம் ஆகிய கிராம வயல்களை கடந்து வரவேண்டும். ஆனால் தண்ணீர் வரும் வழியில் விவசாயிகள் தண்ணீரை தடுத்து கொண்டம் அமைத்து பாசனம் செய்து வருவதால் கடைமடை பகுதி வரை பாசனத்துக்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடைமடை பகுதியில் உள்ள சம்பா நெல் பயிர் பால் கதிர் வரும் நிலையில் கருகி காய்ந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைமடை பகுதிக்கு பாசனத்துக்கு தண்ணீர் வராததால் என்ன செய்துவது என்று தெரியாமல் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வீராணம் ஏரியில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பகுதி விவசாயிகள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கரிகாலசோழன் அரிய கோஷ்டி வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் சிதம்பரம் சார்- ஆட்சியரை சந்தித்து வீராணம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை பாசனத்திற்கு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் கடைமடை பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் இல்லாததால் பாசன வாய்க்காலில் வந்த குறைந்தளவு தண்ணீரை வைத்து நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவும் செய்யப்பட்டது. ஏக்கருக்கு ரூ 25 ஆயிரத்து மேல் கடன் வாங்கி செலவு செய்துள்ளோம். ஆனால் தண்ணீர் இல்லாமல் எங்கள் பயிர் காய்ந்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் வயலில் உரம் போட்டுள்ளோம். அந்த உரம் தண்ணீரில் கரைவதற்கு தண்ணீர் இல்லாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் வயலில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டாண்டாக நாங்கள் விவசாயத்தை செய்து வருகிறோம். வீராணம் ஏரியில் இருந்து அரியகோஷ்டி வாய்க்காலுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்தால் தான் அது கடைமடை வரை பாசனத்திற்கு வரும். எனவே அரிய கோஷ்டி வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்காலில் வரும் தண்ணீரை மறித்து கொண்டம் கட்டுவதையும் வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் நீர் வளத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்துக்கும் முறை வைத்து தண்ணீர் திறக்க வேண்டும்' என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.