Skip to main content

சேலம்: கந்துவட்டிக்காரர்கள் தொல்லை தாங்க முடியல... தம்பதி தீக்குளிக்க முயற்சி!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

சேலத்தில், கந்துவட்டிக்காரர் கடன் கேட்டு தொல்லை கொடுத்ததால், விரக்தி அடைந்த தம்பதியினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாப்பிள்ளைகாடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (52). சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (45). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். 

salem district collector office couple incident police


கார்த்திகேயன் தனது நிறுவனம் மூலம் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இதற்காக பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், கடனை சரியாக திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். வட்டி செலுத்த தாமதம் ஆனதால், வட்டிக்கு மேல் ஒரு வட்டி விதித்து, அதையும் கறாராக கேட்டு வசூலிக்கத் தொடங்கினர். இதனால் கடன் கொடுத்த ஒருவருக்கும் அசல் தொகையை இதுநாள் வரை கார்த்திகேயனால் செலுத்த முடியவில்லை. இதனால் கடன்தாரர்களிடம் அவகாசம் கேட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால், கந்துவட்டிக்காரர்கள் தினமும் அவருடைய வீட்டுக்கு பணத்தைக் கேட்டு படையெடுக்க ஆரம்பித்தனர். பலர் அவரையும், குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.


இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (பிப்.10) வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. அதையடுத்து, கந்துவட்டிக்காரர்களின் தொல்லை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பதற்காக கார்த்திகேயன் தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். 


கந்துவட்டிக்காரர்கள் தினமும் அளித்து வந்த தொல்லையால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர்கள், திடீரென்று தாங்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் பாய்ந்து சென்று அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி எறிந்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் உடல் மீது குடம் குடமாக தண்ணீர் கொட்டினர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இச்சம்பவத்தைப் பார்த்த புகார் கொடுக்க வந்த பொது மக்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சேலம் நகர காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்