Skip to main content

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்று! உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தல்!!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

 


பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று சேலத்தில் நடந்த உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

t


உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சிஐடியு 13வது மாநில மாநாடு சேலத்தில் மே 18, 19 ஆகிய இரு நாள்களாக நடந்தது. ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடந்த இரண்டாம் நாள் மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:


மக்களவையில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது விநியோகத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.


பணியிடங்களில் பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாத ஊதியம் 21000 மற்றும் உதவியாளர்களுக்கு 18000 வழங்க வேண்டும். 


வீட்டுவேலை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் தமிழகம் முழுவதும் பணியாற்றும் 1.27 லட்சத்திற்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களையும், மோட்டார் பம்ப் ஆபரேட்டர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 


பீடி தொழிலாளர்களுக்கு வாரம் ஆறு நாள்கள் மட்டுமே பணி வழங்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி 300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 


பட்டாசு தொழிலில் தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

சார்ந்த செய்திகள்