பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் படியில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்று தமிழக அரசின் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மகளிருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது பள்ளியில் இருந்து குறைந்த தூரத்திலேயே மாணவர்கள் இருப்பதாகவும், மாணவர்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயங்கிவருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஷேர் ஆட்டோக்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்களை ஏற்றிச் செல்ல முடியும் என்று கூறிய நீதிபதிகள், பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிட்டனர். நடுத்தர - ஏழை மாணவர்கள் எந்தப் பகுதிகளில் அதிக அளவில் உள்ளனர் என கண்டறிந்து, அந்த வழித்தடங்களில் அதிக பேருந்துகளை இயக்க அரசு பரிசீலிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.