Skip to main content

விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகளிடம் ரூ.2.33 லட்சம் அபராதம் வசூல்! 

Published on 05/11/2018 | Edited on 05/11/2018
kpn

 

சேலத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட சொகுசு பேருந்துகளிடம் இருந்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஒரே இரவில் ரூ.2.33 லட்சம் அபராதம் வசூலித்தனர்.


தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூர்களில் பணியாற்றி வரும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். 


இதற்காக அரசுத்தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் லட்சகணக்கானோர் பயணிக்கும் நிலையில், பேருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.


இதுபோன்ற விழாக்காலங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டணக் கொள்ளை தொடர்பாக பரவலாக புகார்கள் கிளம்பிய நிலையில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் கடந்த இரு நாள்களாக ஆம்னி பேருந்துகளை திடீர் தணிக்கை செய்து வருகின்றனர். 


சேலத்தில் நவம்பர் 2ம் தேதி இரவு 7 மணி முதல் 3ம் தேதி காலை 7 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். தொப்பூர் சுங்கச்சாவடி, மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் சோதனை நடந்தது.


வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன் (சேலம் மேற்கு), அங்கமுத்து (சங்ககிரி), செந்தில்வேலன் (தர்மபுரி) ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்¢ விஸ்வநாதன், தனபால் (சங்ககிரி), வெங்கடேசன், செந்தில் (சேலம் மேற்கு), அன்புச்செழியன், ராஜாமணி, மணிமாறன், பன்னீர்செல்வம் (தர்மபுரி) ஆகியோர் சிறப்பு ஆம்னி பேருந்துகள் சோதனையில் ஈடுபட்டனர்.


பர்மிட், சாலைவரி, தகுதிச்சான்றிதழ், இன்சூரன்ஸ், கூடுதல் சரக்கேற்றுதல், காற்று ஒலிப்பான், இசை ஒலிப்பான் ஆகிய விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர். கூடுதல் கட்டணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். முக்கிய பாதுகாப்பு அம்சங்களுள் ஒன்றான, வாகனத்தின் பின்புறத்தில், ஒளிரும் சிவப்பு பட்டை ஒட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


இதில், மொத்தம் 417 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டன. 93 பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. விதிகளை மீறியதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ஒரே இரவில் ரூ.2.33 லட்சம் அபராதம் (இணக்கக் கட்டணம்) வசூலிக்கப்பட்டது.


போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் கெடுபிடியால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு பேருந்து ஓட்டிய கே.பி.என் டிராவல்ஸ் டிரைவர் கைது!  -உயிர்தப்பிய பயணிகள்!

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

கோயம்பேட்டிலிருந்து நாகர்கோயில் சென்ற பிரபல கே.பி.என். டிராவல்ஸ் டிரைவர் குடித்துவிட்டு பேருந்தை ஓட்டியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

kpn

 

 

இதுகுறித்து, நக்கீரனை தொடர்புகொண்ட பயணிகள் நம்மிடம் பதைபதைப்போடு, "கோயம்பேட்டில் இன்று(2019 மே-21)  இரவு 8 மணிக்கு எடுக்கவேண்டிய பேருந்தை எடுக்காமல் டிரைவர் கதிரேசன் ஷட்டரை இறக்கி பூட்டிவைத்திருந்தார். அந்த பேருந்து எண் AR01T9919. பயணிகள் அனைவரும் சத்தம்போட்டபிறகுதான் பேருந்தையே எடுத்தார். எடுக்கும்போதே ஒரு வாகனத்தில் இடித்துவிட பார்த்தார். அதற்குப்பிறகு, பேருந்து தாறுமாறாகத்தான் ஓடியது. ஒரு கட்டத்தில் பெருங்களத்தூர் வந்ததும் பேருந்தை நிறுத்திவிட்டு வெகுநேரம் ஆகியும் டிரைவர் கதிரேசன் பேருந்தை எடுக்கவில்லை. 
 

இந்நிலையில், அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் வந்து டிரைவிரிடம் போக்குவரத்து நெரிசலாவதால் பேருந்தை எடுக்கும்படி சொன்னார்கள். ஆனால், போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சந்தேகமடைந்த போலீஸார் பரிசோதித்தபோதுதான் டிரைவர் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தோம். 
 

இத்தனை பேரும் டிரைவரை நம்பித்தான் பயணக்கட்டணத்தை செலுத்தி பேருந்தில் ஏறுகிறோம். ஆனால், கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு பேருந்தை ஓட்டியிருக்கிறார் கே.பி.என் டிராவல்ஸ் டிரைவர். 14 நேரம் இரவுப்பயணம். நல்லவேளை பெருங்களத்தூர் போக்குவரத்து போலீஸாரால் உயிர்தப்பினோம். இல்லையென்றால், விபத்துக்குள்ளாகியிருப்போம்" என்கிறார்கள் அச்சம் விலகாமல்.
 

kpn

 

 

இதுகுறித்து, டிரைவரை கைது செய்த பெருங்களத்தூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதியை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, "போக்குவரத்துக்கு இடஞ்சலாக பேருந்தை நிறுத்திவைத்திருந்ததோடு ஏடகூடமாக பேசியதால் சந்தேகமடைந்து பரிசோதித்தபோதுதான் குடித்திருப்பதை கண்டறிந்து கைது செய்து மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுதியுள்ளோம்" என்றார். 


இந்நிலையில், மாற்றுப்பேருந்து கேட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதோடு அலட்சியத்துடன் செயல்பட்ட கே.பி.என் டிராவல்ஸ் உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.