![Royal Enfield company organized the awareness program](http://image.nakkheeran.in/cdn/farfuture/5InWhmv3wp7wE2VOoJuNqeNoyeOhHxKn4vSB_73lCVU/1706175785/sites/default/files/inline-images/th-1_4583.jpg)
பிரபல ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பல்வேறு சமூக கட்டமைப்பு பணிகளைச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடிக்களம் மற்றும் கூடலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
நல்லூர் ஒன்றியத்தின் தொகுதி வள மேம்பாட்டு அலுவலகத்தில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களைக் கொண்டு, மாணவ - மாணவிகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாணவ - மாணவிகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகளின் உரிமைகள்; அவர்களது பாதுகாப்புகள்; பள்ளியிலும் வெளிப்புற சூழ்நிலையிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்; எப்படி எச்சரிக்கையாக இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் மற்றும் சுகாதாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், மாதவிடாய் சுகாதாரம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துடன், ரியல் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தியது. மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் தொடர்ந்து நடைபெறும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.