Skip to main content

கரோனாவுக்கு கோவில் கட்டும் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி...

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

Retired electricity officer build a temple for Corona

 

தேனி அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி கரோனா வைரசுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. இந்தியாவில் 2வது அலையாக உருவெடுத்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 3வது அலையும் வரப் போவதாக எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இதனால், கரோனா என்றாலே மக்களிடம் இனம்புரியாத அச்சமும், பயமும் ஏற்பட்டுள்ளது. கரோனா மீதான பயம் ஒருபுறம் இருக்க, சமீபத்தில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் 'கரோனா தேவி' சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கரோனாவுக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இந்நிலையில், தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி ராஜரத்தினம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கரோனாவுக்கு கோவில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளார். இது அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. சக்தி இருப்பதாக உணர்ந்து அம்மச்சியாபுரத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரம் விவசாய நிலத்துக்குள் கரோனா கோவில் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக கம்புகள் நடப்பட்டு, அதில் வேப்பிலை கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜரத்தினத்திடம் கேட்டபோது, “நான் மின்வாரியத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது விவசாயம் செய்துவருகிறேன்.

 

Retired electricity officer build a temple for Corona

 

கரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துள்ளது. கண்ணுக்குத் தெரியாத அந்த வைரஸ் உலகில் பல தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இதனால் கரோனாவுக்குள் ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன். முன்பொரு காலத்தில் அம்மை நோய் தாக்கம் அதிக அளவில் இருந்தபோது, அது வழிபாடாக மாறியது. அதேபோல்தான் கரோனாவையும் பார்க்கிறேன். அதனால், கோவில் கட்ட முடிவு செய்தேன். விரைவில் மேடை வடிவல் கோவில் கட்டவுள்ளேன். பூஜை, வழிபாடு எல்லாம் கிடையாது. இந்த வழியாக கடந்து செல்பவர்கள் கரோனா கோவிலைப் பார்த்துக் கும்பிட்டுச் செல்லட்டும். அதன் மூலம் அவர்கள் பாதுகாப்பான சூழலில் வாழட்டும் என்பதற்காக இதைக் கட்டுகிறேன்” என்று கூறினார். அவர் வைத்துள்ள அறிவிப்பு பதாகையில் 1962ஆம் ஆண்டு என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “அந்த ஆண்டிலும் ஏதோ நோய் பாதிப்பில் மக்கள் பலர் உயிரிழந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். அதனால் அதைக் குறிப்பிட்டேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்