Skip to main content

பாலியல் தொல்லைக் கொடுத்த மாமனாரைக் கொலை செய்த மருமகள் கைது!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

ramanathapuram district father in law incident daughter in law police investigation

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கேழல் கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராஜனுக்கும் (வயது 27),  கனிமொழிக்கும் (வயது 25) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும் குழந்தைகள் இல்லாமல் விரக்தியில் இருந்து உள்ளனர். இதையடுத்து, மருமகள் கனிமொழிக்கு, மாமனார் முருகேசன் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுப் பற்றி கனிமொழி தனது கணவரிடம் பலமுறை கூறியும் அவர், இதைக் கண்டுக் கொள்ளவில்லை. 

 

இதனால் கனிமொழியிடம் அவரது மாமனாரின் பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அத்துமீறியதையடுத்து அவரை கொலை செய்வது என முடிவு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 20 நாட்களுக்கு முன்பு, மாமனார் சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட மாமனாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மறுநாளே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். யாருக்கும் எதுவும் சந்தேகம் வராததால், அவரது இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தது. உணவில் விஷம் வைத்து கொலை செய்த மருமகள் அதனை யாரிடமும் தெரிவிக்காமல் தொடர்ந்து மறைத்து வந்துள்ளார்.

 

மாமனாரை கொலை செய்ததால் கனிமொழி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், கீழக்குளம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து நடந்த விவரங்களைக் கூறினார். அதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் கீழத்தூவல் காவல்துறையினர் கனிமொழியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். 

 

அப்போது காவல்துறையிடம் கனிமொழி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, "எனக்கு மூன்று ஆண்டுகளாக மாமனார் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தார். எத்தனையோ முறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை; என்னிடம் அத்துமீறி நடந்தார். இதுப் பற்றி கணவரிடம் கூறினேன். அவரும் இதனை கண்டுக் கொள்ளவில்லை. இதனால் இனி மேலும் பொறுக்க முடியாததால் மாமனாருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொடுத்தேன். நடந்த சம்பவத்தை நான் யாரிடமும் சொல்லாமல் மறைத்தேன். ஆனால் எனக்கு மனசு கேட்கவில்லை. இதனால் சரணடைந்தேன்". இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


 

சார்ந்த செய்திகள்