Skip to main content

இந்திய இறையாண்மை மீதான தாக்குதல்! இலங்கை அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
Boat



தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்து அந்நாட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 8 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா 3 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
 

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறைவானது என்பதால் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது; அதுமட்டுமின்றி கச்சத்தீவையொட்டிய கடல் எல்லையில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையும் ஆகும். ஆனால், இவை எதையுமே மதிக்காத இலங்கை அரசு கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களப் படை மூலம் கைது செய்து சிறைகளில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது இருதரப்பு ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும்.
 

தமிழக மீனவர்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அடித்தளம் அமைத்தது இராஜபக்சே அரசு ஆகும். 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ‘‘நீடித்த வளர்ச்சிக்கான இயற்கை வளங்களை எப்படி பாதுகாப்பது?’’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பேசிய அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்ச, ‘‘தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் புகுந்து மீன் வளங்களையும், கடல் செல்வங்களையும் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களை பன்னாட்டு கடல் சட்டப்படி கைது செய்து 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார். அதன்பிறகு தான் மீனவர்களை கைது செய்து 3 மாதங்கள் சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற செயல்களில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
 

வங்கக் கடலுக்கு ஒவ்வொரு முறை மீன்பிடிக்கச் செல்லும் போதும் தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது.  தமிழக மீனவர்கள் 3 மாதங்களுக்கு  சிறையில் அடைக்கப்பட்டால் அந்தக் காலத்தில் மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும். இத்தகைய சூழலில் அவர்களால் ரூ.60 லட்சம் அபராதம் செலுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்? அவ்வாறு அபராதம் செலுத்தாவிட்டால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும்  வாழ்நாள் முழுவதும் இலங்கை சிறைகளில் வாட வேண்டும். இது கொடுமையான மனித உரிமை மீறல்.
 

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக டெல்லியில் கடந்த 22.01.2013 அன்று அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்திய&இலங்கை கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில்,‘‘எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது எத்தகைய சூழலிலும் பலப்பிரயோகம் செய்யக்கூடாது. மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் போக்கு தொடர வேண்டும்’’ என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 18.01.2015 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசிய போது, இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விஷயத்தில் மனிதநேய அணுகுமுறை தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  3 மாத சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதம் விதிப்பதுமா மனிதநேய அணுகுமுறை?
 

இரு தரப்புப் பேச்சுக்களில் எடுக்கப்பட்ட எந்த முடிவையும் மதிக்காமல் தமிழக மீனவர்கள் மீது சிங்கள அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது ஏற்கத்தக்கதல்ல. இது மீனவர்கள் மீதான அடக்குமுறை மட்டுமல்ல.... இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் சிங்களப் படையினரால் 800-க்கும் கூடுதலான தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 200&க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்போது தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையிலான இத்தகைய செயல்களை இந்தியா இன்னும் வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?
 

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அமைதி காப்பது முறையல்ல. இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்து அந்நாட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும்; தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தர வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.