Skip to main content

30,000 பொறியியல் மாணவர்கள் வாழ்வில் விளையாடுவதா? தேர்வு முடிவை வெளியிடுக!ராமதாஸ்

Published on 17/02/2019 | Edited on 17/02/2019

 


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ’’தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 150 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. மாணவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், அவர்களைத் தண்டிக்கும் வகையில் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

 

r

 

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கலந்தாய்வில் பங்கேற்று 2018-19 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதலாம் பருவத்தேர்வு கடந்த நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 90 ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்றனர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. 350-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் 60 ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், 150 கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆயிரம்  மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

 முதலாம் ஆண்டில் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை சம்பந்தப்பட்ட  கல்லூரிகள் இன்னும் நிறைவு செய்யவில்லை என்றும், மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1200 வீதம் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் கட்டவில்லை என்றும் கூறியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், அதன் காரணமாகவே  தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு உண்மையானதாக இருக்கலாம்; ஆனால், அதற்காக மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தி வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

 

மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாணவர்கள் நலனுக்கான கட்டணத்தை வசூலித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் செலுத்துவது ஆகியவை சம்பந்தப்பட்ட கல்லூரிகளும், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகமும் இணைந்து செய்ய வேண்டிய பணியாகும். அவற்றை செய்யாதது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தவறு ஆகும். அதேபோல், மாணவர்கள் நலனுக்கான கட்டணம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஏற்கனவே வசூலிக்கப்பட்டு விட்ட நிலையில், அதை செலுத்தாதது கல்லூரி நிர்வாகங்களின் தவறு ஆகும். அதற்காக தண்டிக்கப்பட வேண்டியவை சம்பந்தப்பட்ட கல்லூரிகளும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகமும் தானே தவிர, மாணவர்கள் அல்ல. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க தவறாகும்.

 

2016-ஆம் ஆண்டில் 30 பொறியியல் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து வசூலித்த தேர்வுக்கட்டணத்தை  அண்ணா பல்கலைக்கழகத்தில் செலுத்தவில்லை என்பதற்காக அக்கல்லூரிகளில் பயின்ற 6 ஆயிரத்திற்கும்  கூடுதலான மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதனால், அவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வது, பணிக்கு செல்வது ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோல், இப்போதும் முதலாமாண்டு மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதனால், அவர்களால் இரண்டாம் பருவத்திற்கான பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இது அவர்களின் கல்வியை பாதிக்கக்கூடும்.

 

மாணவர்கள் செய்யாத தவறுக்கு அவர்களை தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. மாணவர்களின் சான்றிதழ்களை குறிப்பிட்ட கால வரையறைக்குள் தனியார் கல்லூரிகள் சரிபார்த்து வழங்காவிட்டால், அவற்றுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் நினைவூட்டல் கடிதங்களை அனுப்புவது பல்கலைக்கழகத்தின் பணியாகும். அதன்பிறகு சான்றிதழ்களை சரிபார்க்காத கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது தவறான முன்னுதாரணமாகும்.

 

எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 150 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும், இனி இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்கவும் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.