Skip to main content

‘என்னை காப்பாற்றியவர் விஜயகாந்த் தான்..’ - கலங்கிய ரஜினி 

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Rajini said fervently that it was Vijayakanth who saved me

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான தொடண்டர்கள் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். 

Rajini said fervently that it was Vijayakanth who saved me

இந்த நிலையில் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசிய போது, “நான் இப்போதுதான் கன்னியாகுமரியில் இருந்து வருகிறேன்; நேற்றே வரவேண்டியது, முடியாமல் போய்விட்டது. விஜயகாந்த் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும் என்றால் நட்புதான்; நட்புக்கு இலக்கணமாக இருந்தவர் விஜயகாந்த். அவருடன் ஒருமுறை பழகிவிட்டால் வாழ்கை முழுவதும் நம்மால் மறக்கவே முடியாது. அன்புக்கு அடிமை என்று சொல்வார்கள்; அதனால்தான் விஜயகாந்திற்கு அதிக நண்பர்கள்; அவருக்காக உயிரை கொடுக்கும் அளவுக்கு இருந்தார்கள்; இருக்கிறார்கள். நண்பர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது கோபப்படுவார். ஆனால் யாருக்கும் அவர்மீது கோபம் வராது. ஏனென்றால், விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும். அன்பு இருக்கும், சுயநலம் இருக்காது. தைரியத்திற்கும் வீரத்திற்கும் இலக்கணமானவர்.

எனக்கு உடல்நிலை சரியில்லாத போது ராமச்சந்திரா மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். அப்போது நிறைய மக்கள், பத்திரிகையாளர்கள் கூட்டம் அதிகமாக திரண்ட நிலையில் ஒன்றுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் விஜயகாந்த் என்ன செய்தார் என்று தெரியவில்லை, எல்லாரையும் பேசி அனுப்பி வைத்து விட்டு எங்கள் வீட்டாரிடம், அண்ணனோட ரூம் பக்கத்தில் எனக்கும் ஒரு ரூம்போடுங்க நான் பாத்துகிறேன் அண்ணன என்று கூறியுள்ளார். அது என்னால் மறக்கவே முடியாது என்று கனத்த இதயத்துடன் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் சங்கத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா கலைநிகழ்ச்சிக்காக சென்றிருந்தோம். நிகழ்ச்சி எல்லாம் முடித்துவிட்டு வரும்போது மற்ற கலைஞர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏறிவிட்டனர். நான் வரும்போது நேரமாகிவிட்டது. ரசிகர்கள் எல்லாம் என்னை சூழ்ந்துவிட்டார்கள்; 5 நிமிடத்திற்கு என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை; கூட இருக்க பவுன்ஸர்களாலும் கூட ஒன்றுமே செய்யமுடியாமல் திண்டாடினார்கள். அதையெல்லாம் பஸ்ஸில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்த், கூட்டத்திற்குள்ளே வந்து அவரது தோளில் இருக்கும் துண்டை வைத்து எல்லாரையும் அடித்து விரட்டி, என்னை மீட்டு பூ மாதிரி கொண்டுவந்து பஸ்ஸில் உட்காரவைத்து அண்ணா உங்களுக்கு ஒன்னுமில்லையே என்று கேட்டார். அந்தமாதிரி இருந்த ஒரு ஆள கடைசி நேரத்தில் இப்படி பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. 71 பால்தான், அதுக்குள்ள பல சிக்ஸர்கள், பல ஃபோர்கள் அடித்து நூற்றுக்கணக்கான ரன்களை குவித்து, மக்களை மகிழ்வித்து தற்போது விக்கெட்டை இழந்துவிட்டு உலகம் என்கிற ஃபீல்டை விட்டு போய்ட்டார். கேப்டன் என்பது பொருத்தமான பெயர். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் தான். வாழ்க விஜயகாந்த்!” என்று மிகுந்த வருத்தத்துடன் பேசினார்.

சார்ந்த செய்திகள்