Skip to main content

ஓய்வூதிய வயதை உயர்த்தியது நிதிப் பற்றாக்குறையைத் தான் காட்டுகிறது! த.ப.ஆ.கூ. பொதுச்செயலாளர் பேட்டி!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

tamil nadu


தமிழக அரசு ஓய்வூதிய வயதை உயர்த்தியது என்பது அரசின் நிர்வாகக் குளறுபடியையும் நிதிப் பற்றாக்குறையையும் தான் காண்பிக்கிறது என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
 

திண்டுக்கலுக்கு வருகை தந்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்டரி டைமண்ட் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,
 

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறக்கூடிய வயதினை 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் இன்றைக்கு இந்த ஆண்டு ஓய்வு பெறக்கூடியவர்களுக்கு அது பலன் அளிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் ஒரு நீண்டகால பயணத்திலே ஆசிரியர்கள், அரசு ஊழியர் இயக்கங்கள் எதுவும் எழுப்பாத இந்தக் கோரிக்கையை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டு இருக்கிறது.
 

கடந்த 15 நாட்களுக்குள்ளாக நிதி நெருக்கடியின் காரணமாக அகவிலைப்படி உயர்வு ரத்து ஈட்டிய விடுப்பு காக்கக்கூடிய உரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது. இவர்களுடைய ஜிபிஎப் வட்டித் தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லக்கூடிய அரசு ஓர் ஆண்டிற்கான ஓய்வு பெறும் வயதை அதிகரித்திருப்பது அரசினுடைய நிர்வாகக் குளறுபடிகள், அரசினுடைய நீதி நெருக்கடியைக்  காண்பிக்கிறது.

 

 

படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி லட்சக்கணக்கான மாணவர்கள் அரசுப் பணிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

அரசாணை எண் 56 என்ற ஒரு அரசாணை வெளியிட்டு கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளைக் குறைப்பதற்கான குழுவினை அரசு அமைத்து அதன்படி அரசு பணி இடங்களைக் குறைத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு நன்மை பயப்பதாக அமையாது.
 

தமிழக அரசு, ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மேல் நலனோடு செயல்படக் கூடியதாக இருந்தால் அவர்களுக்குப் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதும் பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்குவதுமே உண்மையான பலனாக அமையும். மற்றபடி 59 ஆண்டுகள் என்பது மத்திய அரசு பணிகளில் 60 ஆண்டுகளாக உள்ளது. 58 ஆண்டுகளாக இல்லாமலும் 60 ஆண்டுகளாக இல்லாமலும் ஒரு அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
 

இந்த ஆண்டு அதிக அளவில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளார்கள். அரசு எடுத்த முடிவாகத்தான் நினைப்பர். அவர்களுக்கான நிதி பங்களிப்பினை வழங்க முடியாமல் அரசு எடுத்த முடிவாகத்தான் இதனை நாங்கள் பார்க்கின்றோம். இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் அரசு செயல்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும். தமிழகத்தில் நிலைமை சீரான பிறகு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்