
கரூரில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக புத்தகத் திருவிழா அரங்கத்திற்குள்ளும் மழை நீர் உட்பகுந்ததால் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கரூரில் நேற்று(26.8.2022) இரவு கனமழை பெய்தது. விடிய விடிய கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் கனமழையின் காரணமாக புத்தகத் திருவிழா அரங்கை சுற்றி குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கின்றது.

கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய கரூர் புத்தகத் திருவிழா 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக புத்தகத் திருவிழா அரங்கத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துமிடம், நுழைவு வாயில் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. மேலும், புத்தக அரங்கிற்குள் மழை நீர் உட்பகுந்ததால் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக புத்தகத் திருவிழாவிற்கு பொதுமக்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா அரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளன. மழையின் காரணமாக புத்தகங்கள் சில மழை நீரில் நனைந்துள்ளன.
பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக புத்தக அரங்கிற்குள் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டு, ஜேசிபி எந்திரம் கொண்டு மண்ணை கொட்டி சமன்படுத்தி வருகின்றனர். இதனால் புத்தகத் திருவிழாவை காண வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.