
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள இளங்கியனூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(60) என்பவரது மனைவி கொளஞ்சியம்மாள்(55). இவர் கடந்த 30-ஆம் தேதி முள்ளங்கி சாம்பார் வைத்தார். இவர்களின் மகன் வழி பேரன்களான 12, 6 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுவன் மற்றும் நான்கு வயது சிறுமியும் சேர்ந்து இரவு நேரம் சாப்பிட்டுள்ளனர். அன்று இரவு கொளஞ்சியம்மாளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அதையடுத்து அவர் கூத்தகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முள்ளங்கி சாம்பார் சாப்பிட்டபின் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கொளஞ்சியம்மாள் மருத்துவரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி சுப்பிரமணியன், மற்றும் மேற்குறிப்பிட்ட சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனால் சுப்பிரமணியன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், சிறுவர்கள் கடலூர், விருதாச்சலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளஞ்சியம்மாள் 4-ஆம் தேதி இரவு உயிரிழந்தார். அடுத்த நாள் 5-ஆம் தேதி மாலை ஜிப்மர் மருத்துவமனையில் இருந்த சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதையடுத்து கடலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் இளங்கியனூர் கிராமத்தில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முள்ளங்கி சாம்பார் சாப்பிட்டதால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? அல்லது அவரின் மரணத்திற்கும் உடல் உபாதைக்கும் வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 'பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு தான் இறப்புக்கான காரணம் தெரியவரும்' என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.