போதைக்கு பஞ்சர் பசையை தண்ணீரில் கலந்து குடித்த
மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
சைக்கிள், டூவிலர் பஞ்சர் ஒட்டப்படும் பசையை போதைக்கு கரைத்துக்குடித்த பள்ளி மாணவர்கள் வயிற்று வலியால் அவதியுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அபிஷேக கட்டளையை சேர்ந்த மாணவர்கள், சஞ்சை, தமிழ்மணி, முத்துக்குமார், யுவராஜ், மனியரசன் ஆகியோர் கடையில் பஞ்சர் ஒட்டப்படும் பசையை காசுக்கொடுத்து வாங்கி வீட்டிற்கு போகும் வழியில் போதைக்காக தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு போன ஒரு மணி நேரத்தில் அத்தனை பேரும் அவரவர்கள் வீட்டில் மயக்கம் போட்டு விழுந்திருக்கின்றனர். அவர்களை விசாரித்த பெற்றோர்களிடம் நாங்கள் பஞ்சர் ஒட்டும் பசையை கலந்து குடித்துவிட்டத்தாக கூறியிருக்கின்றனர். அவர்களை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேலையில்லா திண்டாட்டம் இருந்துவரும் நிலையில் கிடைக்கிற வேளைகளை கொண்டு மிக சிக்கனமாக குடும்பம் நடத்திவரும் கிராமப்புறத்தவர்களின் வாழ்க்கையில் அடையாக தமிழக அரசின் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது, ஏற்கனவே குடும்பத்தலைவர்களை குடியில் இருந்து காப்பாற்றமுடியாமல் தவித்துவரும் நிலையில் படிக்கும் மாணவர்களிடமும் குடிபழக்கத்தை உறுவாக்கிவிட்டது தமிழக அரசு.
குடிப்பதற்கு பாட்டில் வாங்க பணம் கிடைக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். புகையிலையை ஊறவைத்து குடிப்பதும், எக்ஸ்பிரி ஆன இருமல் மருந்தை குடிப்பதும், பெவிக்கால், உள்ளிட்ட பசைகளை கரைத்துகுடிக்கும் செயலிலும் ஈடுபட துவங்கிவிட்டனர்.
கடந்த மாதம் இதே போல் மருத்துவமனையில் உள்ள குப்பைகளை கொளுத்துவதற்கு ஒடுக்கப்பட்ட மருத்துவ ஸ்பிரிட்டை, ஸ்பிரிட் சாராயம் என நினைத்து அதை கலந்து குடித்து இரண்டு இளைஞர்கள் இறந்து போனார்கள். தொடர்ந்து இது போன்ற காரியங்களில் ஈடுபடும் மாணவர்கள் மத்தியில் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் ’ என்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்.
- க.செல்வகுமார்