
ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதனை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், தலைமறைவான மதனை கடந்த 18.06.2021 அன்று தருமபுரியில் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் ஆபாசமாகப் பேசி வீடியோ பதிவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்த மதன், வருமான வரி செலுத்தாதது தெரியவந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வருமான வரி செலுத்தவில்லை. இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களுடன் ஒப்படைக்க கூடிய நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.
மதனின் மனைவி கிருத்திகா பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் 4 கோடி ரூபாய் பணம் இருந்த நிலையில், வருமான வரி செலுத்தாததும் விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் சென்னை பெருங்களத்தூரில் 45 லட்சம் ரூபாயில் சொகுசு வீட்டை மதன் வாங்கியுள்ளார் என்பதும் தெரியவந்தது.
ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் மதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பண மோசடி புகார்கள் வந்ததால் அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் ஆபாசமாகப் பேசிய புகாரில் கைதான யூடியூபர் பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம். அதே நேரத்தில் யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவிற்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்பே பப்ஜி மதனின் ஜாமீன் தொடர்பான விசாரணையில், மதனின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை. முதலில் மதனின் பேச்சைக் கேட்டுவிட்டு ஜாமீன் கேட்டு வாருங்கள்' என மதனின் வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.