Skip to main content

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் பதவியேற்பு!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
PS Raman sworn in as the chief advocate of the government

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு அமைந்ததையடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். இவர், தனது தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ். ராஜகோபாலிடம் கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றவர். இவர் பல முக்கியமான கிரிமினில் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். சென்னை உயர்நீதி மன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், மாநில அரசு, சி.பி.ஐ., ரயில்வே சார்பாகப் பல வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார்.

அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடினார். தி.மு.க. ஆட்சிக் காலமான 1996 முதல் 2001 வரை தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞராகவும் செயல்பட்டிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பல்வேறு வழக்குகளைக் கையாண்டார். இந்த சூழலில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவர் தனது தனிப்பட்ட காரியங்களுக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், தொடர்ந்து தனித்த முறையில் வழக்கறிஞராகச் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமனை, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராகத் தமிழ்நாடு ஆளுநருக்கு அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் இன்று காலை பொறுப்பேற்கிறார். அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த  2009 ஆம் ஆண்டு முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பி.எஸ். ராமன் தலைமை வழக்கறிஞராகப் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்