Skip to main content

ஆசிரியர்களை கரோனா பணிகளில் அமர்த்த தடை விதிக்கக்கோரி வழக்கு!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020
highcourt

 

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 50 வயதுக்கு குறைந்த ஆசிரியர்களின் விருப்பத்தைக் கேட்காமல், அவர்களை பாதுகாப்பு மையப் பணியில் அமர்த்த தடை விதிக்கக்கோரி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு பணிக்கு அனைத்துத்துறை பணியாளர்களையும் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, கரோனா பாதித்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பது, கவுன்சிலிங் வழங்குவது போன்ற பணிகளில்,  சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை பணியமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்தப் பணிகளுக்கு, 50 வயதுக்கு குறைவான ஆசிரியர்களிடம், அவர்களின் விருப்பத்தைப் பெற்று பணியமர்த்த வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், ஆசிரியர்களின் விருப்பத்தை பெறாமல், அவர்களை கரோனா பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக்கூறி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 1,200 ஆசிரியர்கள் ‘ஷிப்ட்’ முறையில், கரோனா கட்டுப்பாட்டு மையப் பணிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் விருப்பத்தைக் கேட்காமலேயே, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு மையப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு,  போக்குவரத்து வசதி ஏதும் வழங்கப்படவில்லை. கட்டுப்பாட்டு மையங்களில் தனி மனித விலகல் பின்பற்றப்படாததால், ஆசிரியர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதால், வீடுகளில் இருந்து கவுன்சிலிங் வழங்க தயாராக இருக்கின்றனர். தனிமனித விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஆசிரியர்களை கரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்