Skip to main content

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரி வழக்கு!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

Chennai High Court


தனியார் மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 


தமிழகத்தில், கரோனா சிகிச்சை பெற 22 அரசு மருத்துவமனைகளை அங்கீகரித்து தமிழக அரசு  உத்தரவிட்டது. தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, 112 தனியார் மருத்துவமனைகளை, கரோனா சிகிச்சை பெறும் மருத்துவமனைகளாக அறிவித்த தமிழக அரசு, விருப்பப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் எனக் கடந்த ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

தனியார் மருத்துவமனைகளில் கரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த 4,500 ரூபாய் கட்டணத்தைவிட அதிகமாக 6,000 முதல் 8,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
 

 


அந்த மனுவில், தனியார் மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு முழு உடல் கவசத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வென்டிலேட்டர்களுக்கு நாள் ஒன்றுக்கு  ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வீதமும், அறை வாடகையாக, 5 ஆயிரம் ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. 

மஹாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் கரோனா சிகிச்சை வழங்க, தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளனர். எனவே, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க, கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
 


 

சார்ந்த செய்திகள்