![Re-instated Vice-Chancellor Jaganathan; The teachers union announced the strike](/modules/blazyloading/images/loader.png)
பல்வேறு ஊழல் மற்றும் சாதிய ரீதியிலான செயல்பாடுகளில் சிக்கி, புகார்களுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு மேலும் ஒரு வருடம் தமிழக ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் ஜெகநாதன் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. அரசினுடைய அனுமதி இல்லாமல் முன்னாள் பதிவாளர் தங்கவேலுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களைத் தொடங்கிய புகாரின் அடிப்படையில் ஜெகநாதன் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதோடு மட்டுமல்லாது உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகளில் ஜெகநாதன் ஈடுபட்டதாக மீது ஆசிரியர் சங்கம் மற்றும் பணியாளர்கள் 500 பக்கங்கள் கொண்ட புகார் கடிதத்தைத் தமிழக ஆளுநருக்கு எழுதியிருந்தனர்.
இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் சாதிய ரீதியாக செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து துணைவேந்தர் ஜெகநாதன் மீதான புகார்கள் குறித்து உயர்கல்வித்துறை அரசு செயலாளர் பழனிசாமி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை அறிக்கையும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜெகநாதன் ஓய்வுபெற இருந்த நிலையில் மேலும் ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை எதிர்த்து ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்றுடன் பதவி முடிந்த ஜெகநாதன் ஆளுநரின் பதவி நீட்டிப்பைத் தொடர்ந்து, மேலும் ஒரு வருடம் பணியைத் தொடர்வதற்கான கோப்பில் கையொப்பமிட்டு பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.