
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். காயமடைந்த 17 பேரும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களைத் தேடும் பணியில் இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், காஷ்மீர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பத்திரமாக வரவழைத்து தமிழகம் அனுப்பி வைக்கத்துள்ளார். காஷ்மீரில் இருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துவரப்பட்ட தமிழக சுற்றுலாப் பயணிகள் பின்னர் அங்கிருந்து பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தங்களை பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றி எனவும் தெரிவித்துக் கொண்டனர்.