Skip to main content

நியாய விலைக் கடைகள் மூடல்; பொதுமக்கள் அவதி

Published on 23/04/2025 | Edited on 23/04/2025
Closure of fair price shops; public suffers

நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் போராட்டத்தால்  நியாய விலைக்  கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

'விரல் ரேகை பதிவு;  ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக எடை தராசு அலுவலக கணினியுடன் இணைத்து ரசீது வழங்கிய பின்பு தான் நியாய விலை கடை எடை தராசு விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும்; பொது விநியோகத் திட்டத்திற்கு தனி நலத்துறை அமைக்கவேண்டும்; அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்; கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்குதல், ஐஏஎஸ் தலைமையில் ஊதிய குழு அமைக்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 22-ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும்,  23-ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும்,  24 -ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது .

இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1200 க்கும் மேற்பட்ட நியாய விலை கடை மூடப்பட்டது.  இதனால் பொதுமக்கள் நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா கூறுகையில், ''45 கிலோ எடையுள்ள ஒரு அரிசி மூட்டையைக் கொடுத்துவிட்டு 50 கிலோவுக்கு எடை போட்டு வழங்க வேண்டும் என்றால் எப்படி வழங்க முடியும்?அதேபோல் கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அனைத்தும் ரேஷன் கடையில் உள்ள பொதுமக்களின் குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப வழங்குவது இல்லை. இதனால் நியாய விலை கடை பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. உடனடியாக கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு  நிறைவேற்ற வேண்டும். இது கடலூர் மாவட்டம் மற்றும் அல்ல தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது'' என்றார்.

கடலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் இளஞ்செல்வி கூறுகையில், ''போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கடைகளும் மூடப்படவில்லை. கடைகளை திறக்க மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து உயர் அதிகாரிகள் தலைமையில் பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது விரைவில் முடிவுக்கு வரும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்