Skip to main content

ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில்  நூதன முறையில் திருடிய பிடெக் பட்டதாரி! சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கைது!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

 

புதுச்சேரி அண்ணாசாலையில் பிரபல நகைக்கடையான ஜாய் ஆலுக்காஸ் உள்ளது. இந்த நகைக்கடையில் தினமும் இரவு வியாபாரம் முடிந்தவுடன், நகைகளை சரி பார்ப்பது வழக்கம். அதுபோல நேற்று முன்தினம் இரவு நகைகளை சரிபார்த்துக்கொண்டிருந்த போது மோதிர பிரிவில் ஒரு மோதிரம் மட்டும் மற்ற நகைகளை விட அதிகமாக ஜொலித்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் நகையை ஆய்வு செய்த போது அது போலி நகை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு வாலிபர் தொப்பி அணிந்து பாதி முகத்தை மூடியவாறு மோதிரத்தை மாற்றியது தெரியவந்தது.

 

p

 

இதுகுறித்து நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்த கடை மேலாளர் எட்டியான் பெரியக்கடை காவல்நிலையத்தில்  புகார் தெரிவித்தார். பெரியகடை  போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

 

p

 

விசாரணையில் அந்த வாலிபர் முருகம்பாக்கம் நாட்டார் தெருவை சேர்ந்த நெடுமாறனின் மகன் கார்த்திக் (வயது 24) பிடெக் பட்டதாரி என்பதும், கையில பணம் இல்லாத போது கோவில் திருவிழாக்களில் வாங்கும் போலி மோதிரங்களை கையில் அணிந்துகொண்டு நகை கடைகளுக்கு சென்று, அங்குள்ள தங்க நகைகளுக்கு பதில் போலி நகையை மாற்றி வைத்து, நகையை திருடியது தெரியவந்தது. மேலும் இது போல் திருடும் பொழுது ஒரே உடையை அணிந்து வருவது  வழக்கமாக வைத்துள்ளார். அதையடுத்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பல்வேறு கடைகளில் திருடிய 8 சவரன் நகைகளை பறிமுதல் செய்து  சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்