Skip to main content

சிலையை விமானத்தில் கொண்டுவராமல் ரயிலில் கொண்டுவர காரணம் இதுதான் - பொன். மானிக்கவேல் பேட்டி...

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

கடந்த 1982ம் ஆண்டு தமிழக கோவிலில் இருந்து ஐம்பொன் நடராஜர் சிலை திருடப்பட்டது. இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
 

pon manikavel

 

 

இதன்பின் பொன் மானிக்கவேல் தலைமையிலான குழு அந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதை கண்டுபிடித்து, அதை மீட்டு இந்தியா கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிலை இன்று காலை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன். மானிக்கவேல் கூறியது.

“சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுக்கும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை உள்ளது.

கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு எனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன. ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி செய்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி.

நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. நடராஜர் சிலையுடன் கடத்தப்பட்ட பழமையான தூண்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும்.

எங்களுக்கு அரசு நிதி அளிக்கவில்லை, அதனால்தான் டெல்லியிலிருந்து விமானத்தில் எடுத்துவரமுடியாமல் சிலையை ரயிலினின் மூலம் சென்னை எடுத்துவந்தோம். சொந்த ஒய்வூதியத்தில் சிலைகளை கண்டுபிடிக்கும் எனக்கு எந்த அகம்பாவமோ, ஆணவமோ இல்லை” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்து நிலையத்தில் உள்ள சிலைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
court order to remove idols from bus stand

பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி  ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகத் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று (13.03.2024) விசாரணைககு வந்தது.  அப்போது, “வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

1,200 ஆண்டுகள் பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
1,200-year-old Tirumal, Vaishnavite sculptures discovered in virudunagar

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகில் அம்மாபட்டி ஊராட்சி, களத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ள திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. களத்தூர் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான திருமால் சிற்பம் இருப்பதாக அம்மாபட்டி வீரையா கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது, “திருமால், மாயோன் என தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி என பிற இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகிறார். இங்கு பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன், கர்த்தரி முக முத்திரையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்து, கிரீட மகுடத்துடனும், காதுகளில் மகர குண்டலங்களுடனும் திருமால் காட்சியளிக்கிறார். முகம் தேய்ந்துள்ளது. சக்கரம் பக்கவாட்டில் திரும்பி பிரயோகச் சக்கரமாக உள்ளது. இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது மார்பில் ஸ்ரீவத்ஸமும், கிரீடமகுடத்தின் பின்பக்கம் சிரச்சக்கரமும் உள்ளன. கைகளின் மேற்பகுதியின் நடுவில் தோள்வளை அணிந்துள்ளார். சிற்பம் 109 செ.மீ உயரமுள்ளது.

இதன் அருகில் 82 செ.மீ உயரமும், 46 செ.மீ அகலமும் உள்ள பலகைக் கல்லில் திருமாலின் பெண் சக்தியான வைஷ்ணவியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. சப்தகன்னியரில் ஒருவரான இவர், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன்னிரு கைகளை தொடையில் வைத்திருக்கிறார். சிற்பம் சேதமடைந்துள்ளது. இதன் வடக்கில் நந்தியும், ஆவுடை இல்லாத லிங்கமும் உள்ளன. இங்கிருந்து 300மீ தூரத்தில் 2½ அடி உயரமுள்ள எட்டுக்கை காளி சிற்பம் உள்ளது. திருமால் கையிலுள்ள பிரயோகச் சக்கர அமைப்பு மூலம், இச்சிற்பங்கள் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். அக்காலகட்டத்தில் இவ்வூரில் அருகருகே சிவன், திருமால், காளி கோயில்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கி.பி.9-ம் நூற்றாண்டு வரை வைணவக் கோயில்களில் சப்தமாதர் வழிபாடு இருந்துள்ளது. 

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

அருகிலுள்ள மேட்டில் பெரிய கருங்கற்கள் உள்ளன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கல்திட்டையின் கற்களாக இருக்கலாம். இதில் இருந்த கற்களை எடுத்து லிங்கத்தைச் சுற்றி வைத்துள்ளனர். மேலும் நுண்கற்காலக் கருவி, செங்கற்கள், சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கசடுகள், சுடுமண் ஓடுகள் போன்றவையும் அங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒரு செங்கலின் அளவு, நீளம் 33 செ.மீ, அகலம் 16.5 செ.மீ, உயரம் 7 செ.மீ. ஆகும். இதன் மூலம் இவ்வூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலத்தில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்துள்ளது எனலாம்.  

1,200-year-old Tirumal, Vaishnavi sculptures discovered in virudunagar

இவ்வூருக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி, மங்கலத்துக்கும் வைணவம், சைவம் சார்ந்த தொடர்புகள் உள்ளன. மங்கலம் சிவன் கோயில் கல்வெட்டில் களத்தூர் குளத்தின் ராஜேந்திர சோழன் மடை குறிப்பிடப்படுகிறது. நத்தம்பட்டியில் 8-ம் நூற்றாண்டு திருமால் சிற்பம் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகருகே உள்ள இம்மூன்று ஊர்களிலும் இரும்புக் காலத்திலும், வரலாற்றின் இடைக்காலத்திலும் மக்கள் வாழ்ந்துள்ளனர். இவ்வூர்கள் சேரநாட்டிலிருந்து மதுரை செல்லும் வணிகப் பெருவழியில் உள்ளன. எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.