Skip to main content

எம்.எல்.ஏ. ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

political leaders mourn evera thirumagan

 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வெ.ரா. திருமகன் (46) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தமிழக காங்கிரசின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனான ஈ.வெ.ரா. திருமகன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இது அவர்களது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பிற்கு முதல்வர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம், வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "இது தாங்க முடியாத துயரமும் வேதனையும் தருகிறது. அவருடைய அகால மரணம் அவருடைய தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என்பதை நான் அறிவேன். இது காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. தம்பி திருமகனுக்கு கனத்த நெஞ்சுடன் என்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட பதிவில், “தந்தை பெரியாரின் கொள்ளுப்பெயரனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.  46 வயதே ஆன அவர் இளம் வயதிலேயே காலமானதை மனம் ஏற்க மறுக்கிறது. திருமகன் ஈவேரா அரசியலில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்க வேண்டியவர். அவரது அகால மரணம் அந்த வாய்ப்புகளை பறித்து விட்டது. அவரை இழந்து வாடும் தந்தை ஈ.வே.கி.ச. இளங்கோவன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பதிவில், “தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வே.கி.ச. இளங்கோவனின் புதல்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வே.ரா. மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்