Skip to main content

போலீஸ்காரர் மாயமான வழக்கு; ஓராண்டுக்குப்பின் கொலை என அம்பலம்; கூட்டாளி கைது!

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
police person passes away accused arrested

சேலத்தில் ஓராண்டுக்கு முன்பு மாயமானதாகச் சொல்லப்பட்ட தலைமைக் காவலர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. அவரைக் கொன்றதாக நெருங்கிய நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (51). சேலம் மாநகர காவல்துறையில், அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். தீவிர மதுப்பழக்கம் கொண்டவரான இவர், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி முதல் திடீரென்று பணிக்கு வரவில்லை. காவல்துறை தரப்பில் விசாரித்தபோது அவர் வீட்டிற்கும் செல்லவில்லை எனத் தெரிய வந்தது. 

இதையடுத்து, ஜெயராமன் மாயமானது குறித்து அவருடைய மனைவி மாலா, சேலம் மாநகர காவல்துறையில் புகார் அளித்தார். உதவி ஆணையர் வெங்கடேசன் நேரடியாக விசாரித்து வந்தார். இதற்கிடையே, ஜெயராமனுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள், அலைபேசி ஆகியவற்றை அவருடைய நண்பரான பஞ்சர் குமார் என்கிற விஜயகுமார் என்பவரிடம் இருந்து மீட்டதாக அவருடைய மனைவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். 

அதன்பேரில், காவல்துறையினர் பஞ்சர் குமாரை பிடித்து விசாரித்தனர். காணாமல் போனதாகக் கருதப்பட்ட தலைமைக் காவலர் ஜெயராமனும், பஞ்சர் குமாரும் நெருக்கமான நண்பர்கள். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கருமந்துறை மலைப்பகுதிக்குச் சென்று ஒன்றாக சாராயம் குடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் போதையிலேயே சேலம் நோக்கி வந்துள்ளனர். ஜெயராமன் உச்சக்கட்ட போதையில் இருந்ததால் அவரால் வாகனத்தில் அமர்ந்து வர முடியவில்லை. போதையில் சரிந்து விழுவது போல் இருந்தார். 

இதனால் பயந்து போன பஞ்சர் குமார், காரிப்பட்டி பகுதியில் ஒரு மரத்தடியில் அவரை இறக்கிவிட்டுவிட்டு அவர் மட்டும் சேலத்திற்கு வந்துவிட்டதாக விசாரணையின்போது பஞ்சர் குமார் தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தைக கைப்பற்றினர். பல நாள்கள் ஆகியும் சடலத்தைக் கேட்டு உரியவர்கள் யாரும் வராததால், அந்த சடலத்தை காவல்துறையினரே அடக்கம் செய்து விட்டனர்.

அதேநேரம், ஜெயராமனை மரத்தடியில் இறக்கிவிட்டு வந்தது குறித்து அவருடைய குடும்பத்தாரிடம் ஏன் தகவல் சொல்லவில்லை என பஞ்சர் குமாரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். மேலும், ஜெயராமனின் வாகனம், அலைபேசி ஆகியவற்றை குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் இருந்துள்ளார். இதனால் பஞ்சர் குமார் மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது. ஜெயராமனின் மனைவி, பஞ்சர் குமாரிடம் தனது கணவர் குறித்து விசாரித்தபோதும் கூட, அவர் எங்கு சென்றார் என்று தனக்குத் தெரியாது என மழுப்பலாகக் கூறியுள்ளார். இதையடுத்து பஞ்சர் குமாரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

சம்பவத்தன்று அவரும், தலைமைக் காவலர் ஜெயராமனும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏதோ ஒரு விவகாரத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பஞ்சர் குமார், அவரை அடித்துக் கீழே தள்ளி விட்டதில் பலத்த காயம் அடைந்த ஜெயராமன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமைக் காவலர் ஜெயராமன் மாயமான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, பஞ்சர் குமாரை ஜன. 11ம் தேதி கைது செய்தனர். தலைமைக் காவலர் ஒருவர் மாயமான வழக்கு ஓராண்டுக்குப் பிறகு கொலை வழக்காக மாற்றப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.